பாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்! #DoubtOfCommonMan
கணபதி மீதான புகார்கள் குறையவில்லை. தனக்குத் துணையாகச் சில நிர்வாகிகளை வைத்துக்கொண்டே, கணபதி தனி ராஜ்ஜியம் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. வடவள்ளி காவல் நிலையத்தில், கணபதிமீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுத்தம் செய்ய வேண்டியது சாலைகளை இல்லை, பல்கலைக்கழகங்களாகிய கல்விச்சாலைகளைத்தான் என்பதை உணர்த்தும் விதமாக நடந்ததுதான், கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கணபதியின் மீதான லஞ்ச வழக்கு. அரசியல் பரிந்துரைகளாலும் கோடிகளைக் கொடுத்தும் துணை வேந்தர் பதவியை வாங்க முடியுமென்ற சூழ்நிலை உருவானபோதே பல்கலைக்கழகங்களில் ஊழலும் ஊற்றெடுக்க ஆரம்பித்துவிட்டது. அது இப்போது காட்டாறாக மாறிவிட்டது.

இதில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கும் விதிவிலக்கு இல்லை. திருச்சிதான் கணபதிக்குச் சொந்த ஊர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த அவர், 2016-ம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார்.
அதே ஆண்டில், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் காலியாக இருந்த பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. அப்போது, இதுதொடர்பாகப் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதனால், பணியிடங்கள் ஒப்புதலுக்காக நடைபெறும் சிண்டிகேட் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
அதையும் மீறி, சிண்டிகேட் கூட்டம் நடத்தி, பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. இந்த விவகாரம் தொடர்பாக, அப்போதைய பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளராக இருந்த மோகன் மற்றும் கணபதி இடையே பனிப்போர் நிலவியது. மோகன் தனது பதிவாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
அந்த விவகாரம் முடிந்தும் கணபதி மீதான புகார்கள் குறையவில்லை. தனக்கு துணையாக சில நிர்வாகிகளை வைத்துக் கொண்டே, கணபதி தனி ராஜ்ஜியம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வடவள்ளி காவல்நிலையத்தில், கணபதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சுரேஷ் என்பவரிடம், உதவிப் பேராசிரியர் பணிக்காக 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கணபதி கையும் கையூட்டுமாகப் பிடிபட்டார்.
அவருக்கு உடந்தையாக இருந்த வேதியியல்துறை பேராசிரியர் தர்மராஜ், அக்காடமிக் காலேஜ் இயக்குநர் மதிவாணன், கணபதியின் மனைவி சொர்ணலதா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. துணைவேந்தர் பதவியிலிருந்து கணபதி நீக்கப்பட்டார். மதிவாணன் தலைமறைவானார். கணபதியும் தர்மராஜும் சிறை சென்றனர். லஞ்சம் வாங்கிய பணத்தைக் கிழித்துப் போட்டதற்காக, கணபதியின் மனைவி சொர்ணலதாவும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டார்.

இதனிடையே, விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் சிவா என்கிற வாசகர், “பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி மீதான வழக்கின் தற்போதைய நிலை என்ன?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இது குறித்து விசாரித்தோம்.

கோவை நீதிமன்றக் கதவு திறக்காததால், சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்று ஜாமீன் வாங்கி வெளியில் வந்துவிட்டார் கணபதி. இந்த வழக்கின் இப்போதைய நிலவரம் குறித்து முதலில் பல்கலைக்கழக வட்டாரங்களில் விசாரித்தோம். "சிறையில் இருந்து வெளிவந்த கணபதி, நீண்ட இழுபறிக்குப் பிறகே துணைவேந்தருக்கான வீட்டைக் காலி செய்து கொடுத்தார்.

மதிவாணனுக்கு, பொள்ளாச்சி உறுப்பு கல்லூரியில் போஸ்டிங் போட்டனர். ஆனால், பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி-யுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் ஒருவருக்கு எப்படிப் பல்கலைக்கழக போஸ்டிங் என்ற சர்ச்சை வெடித்தது. இதனால், அந்த போஸ்டிங்கும் பறிக்கப்பட்டது. மதிவாணன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.
தர்மராஜ், மீண்டும் பல்கலைக்கழகத்தில் இணைவதற்குக் கடிதம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இதற்காக, மேலிடம் வரை வைத்து மூவ் செய்து பார்த்துவிட்டார். ஆனால், எதிர்ப்பு அதிகமாக இருப்பதால் அவரைச் சேர்க்கவில்லை. கணபதியின் மகளுக்கு சமீபத்தில்தான் அவர்களது சொந்த ஊரில் வைத்து திருமணம் நடந்தது.

2016-ம் ஆண்டு அவர் போஸ்டிங் போட்டுக்கொடுத்த 80 பேராவது வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், வெறும் 20 பேர்தான் அந்தத் திருமணத்துக்குச் சென்றுள்ளனர். எங்கே திருமணத்துக்கு சென்றால், மீதம் இருக்கும் லஞ்சத் தொகையைக் கேட்டுவிடுவாரோ என்று பயந்தே பெரும்பாலானோர் போகவில்லை.
கணபதி இல்லாவிடினும், அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர் பொறுப்புக்குழு, தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், கணபதிக்கு உதவி செய்த நிர்வாகிகள் ஆஃப் ஆகிவிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில், 2016-ம் ஆண்டு போடப்பட்ட போஸ்டிங்குகளில் ஊழல் உறுதியாகியுள்ளதால், அவை முழுவதுமாக ரத்தாக வாய்ப்புள்ளது.
ஏறுமுகத்தில் இருந்த பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி, இந்த வழக்கால் இறங்கு முகமாகிவிட்டது. ஊழலைக் காரணம்காட்டி யு.ஜி.சி நிதி தர மறுக்கிறது. விரைவில், பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமிக்க உள்ளனர். இந்த முறையாவது பணம் வாங்காமல் நியமனம் செய்ய வேண்டும். பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு இதுவரை கோவையைச் சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமிக்கவில்லை. எனவே, இந்த முறை மண்ணின் மைந்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்கின்றனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "விசாரணையின்போது சற்று இழுத்தடித்தாலும் கணபதி குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துவிட்டார். விரைவில், கணபதி, தர்மராஜ், மதிவாணன், சொர்ணலதா ஆகிய நான்கு பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளோம். பாரதியார் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிறைய புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அடுத்த அதிரடி நடக்கும்" என்று சஸ்பென்ஸ் வைக்கின்றனர்.

கொஞ்சம் பல்கலைக்கழகங்கள் பக்கமும் எட்டிப்பாருங்க பன்வாரிலால் ஜி. ஏனெனில், நீங்கள்தான் அவற்றுக்கு வேந்தர்!
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
