மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை நியமனத்துக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து, மதுரை, எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்களை நிரப்புவதற்குத் துணைவேந்தருக்குத் தடை விதிக்க வேண்டும். அவர் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதையும் ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, துணைவேந்தர் தேர்வுக் குழு உறுப்பினர்களான ஹரீஷ் மேத்தா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், 'நிர்பந்தத்தால் மட்டுமே செல்லதுரையை துணைவேந்தராகத் தேர்வு செய்தோம்' எனத் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, 'ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்' என துணைவேந்தர் செல்லதுரை, உயர்கல்வித்துறை செயலர், துணைவேந்தர் தேர்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.