வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கடைசி வரை நீடித்த இழுபறிக்கு பிறகே தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றார். `எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம்’ என்று நம்பிக்கையில் இருந்த அ.தி.மு.க கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்திடம் தோற்றார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள இஸ்லாமிய சமூக வாக்குகள் தான் வெற்றி தோல்வியை தீர்மானித்திருக்கின்றன. மொத்தமுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய மூன்றில் தி.மு.க-வை விட ஏ.சி.சண்முகத்துக்கே அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வேலூர், ஆம்பூர், வாணியம்பாடியில் ஏ.சி.சண்முகத்தை தி.மு.க பின்னுக்குத் தள்ளியது. குறிப்பாக தி.மு.க-வின் வெற்றிக்குக் கைகொடுத்தது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வாணியம்பாடி தொகுதிதான். அ.தி.மு.க-வுக்கு அதிக வாக்குகளை அள்ளிக்கொடுத்தது வன்னியர்கள் நிறைந்த அணைக்கட்டு தொகுதி. வாணியம்பாடியில் மட்டும் சுமார் 22,000 ஓட்டுகளை தி.மு.க கூடுதலாகப் பெற்றிருக்கிறது.

இந்த சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர், ஆளும்கட்சியைச் சார்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில். இஸ்லாமிய சமூகத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்காக நிலோஃபர் கபிலை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசியான நிலோஃபர் கபில் ஆரம்பத்திலிருந்தே பா.ஜ.க கூட்டணியை விரும்பவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை கடந்த மார்ச் மாதம் ஹெச்.ராஜா தவறாக சித்திரித்துப்பேசினார். அந்த வெறுப்பில் நிலோஃபர் கபில் தேர்தல் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்கிறார்கள். அதுவே, ஏ.சி.சண்முகத்தின் வெற்றியைத் தடுத்திருக்கிறது என்று குமுறுகிறார்கள் ஏ.சி.எஸ்-சுக்கு நெருக்கமானவர்கள்.

இதுபற்றி அமைச்சர் நிலோஃபர் கபிலிடம் விளக்கம் கேட்க அவரது செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டோம். `போனில் பேசமுடியாது; நேரில் வாங்க’ என்றுகூறினார். நேரில் சென்ற நம் செய்தியாளரிடம், ``சர்ச்சைக்குரிய கேள்வியாக இருக்கிறது. நோ கமெண்ட்ஸ்’’ என்றுகூறி கடைசிவரை பதிலளிக்கவே இல்லை. எனினும், ஏ.சி.எஸ் தரப்பின் அழுத்தம் காரணமாக நிலோஃபர் கபிலின் அமைச்சர் பதவியை பறிக்க அ.தி.மு.க தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.