வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்குகிறது. இதனால் அங்கு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேச மாநிலம் இருப்பதால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க-வும், ஆட்சியைப் பிடிக்க சமாஜ்வாடி கட்சியும் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இந்த நிலையில், அங்கு கடந்த சில தினங்களாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பா.ஜ.வு-க்காக தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். நேற்று முன்தினம்கூட தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமித் ஷா, `உத்தரப்பிரதேச தேர்தல்தான் இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடிய தேர்தலாக இருக்கும். உத்தரப்பிரதேசம் வளர்ச்சியடையவில்லை என்றால் மொத்த இந்தியாவும் பின்தங்கும்' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ``பா.ஜ.க., விவசாயிகளை மதிக்கவே இல்லை, அவர்களை பயங்கரவாதிகள் என்றது, அவர்கள்மீது தாக்குதல் நடத்தியது. அதில் பலர் இறந்தும்போனார்கள். விவசாயிகள் போராட்டம் குறித்த பா.ஜ.க-வின் பதில்களும் அவர்களைக் கோபமடையவே செய்தன, அதற்கு பதிலளிக்கும்விதமாக விவசாயிகள் இந்த முறை பா.ஜ.க-வுக்கான கதவுகளை அடைத்துவிட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்" என்றார்.
