`ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுவரும் வேளையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் இருக்குமிடத்திலிருந்தே தங்கள் மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்திருக்கிறது.

மேலும், இந்த இயந்திரம் மூலம் ஒரே மெஷினில் வெவ்வேறு தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. இதற்கு அரசியல் கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இதற்கிடையில், ரிமோட் வாக்களிப்பு முறை குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே தங்கள் தொகுதித் தேர்தல்களில் வாக்களிக்க வகைசெய்யும் ரிமோட் வாக்களிப்பு முறை...' என்ற கேள்விக்கு, `நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்தும்', `நிச்சயம் பயனுள்ளதே', `முறைகேடுகளுக்கு வித்திடும்' என மூன்று விருப்பத் தேர்வுகள் தரப்பட்டிருந்தன.

இந்த நிலையில், ரிமோட் வாக்களிப்பு முறை குறித்து விகடன் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவில், அதிகபட்சமாக 48 சதவிகிதம் பேர் ரிமோட் வாக்களிப்பு முறை `முறைகேடுகளுக்கு வித்திடும்' என்பதைத் தேர்வுசெய்திருக்கின்றனர்.

அதற்கடுத்ததாக 35 சதவிகிதம் பேர் இது `நிச்சயம் பயனுள்ளதே' என்பதையும், 17 சதவிகிதம் பேர் `நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்தும்' என்பதையும் தேர்வுசெய்திருக்கின்றனர்.