தி.மு.க முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஆகஸ் 24-ம் தேதி அறிவித்தார்.
சென்னை மெரினாவில் கடலுக்குள் 134 அடி உயரத்துக்கு பேனா வடிவ சிலை அமைப்பதற்காக 20.06.2022 அன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை CRZ அனுமதிகோரி விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தது. அதற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பரிசீலித்து ஒப்புதல் வழங்கியது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதியில் இருந்து நேராகச் செல்லும் வகையில் கடலில் இந்த பேனா அமைக்கப்பட உள்ளதாகவும், கடல் நடுவில் பேனா சிலை 134 அடி உயரம் இருக்கும். அதைச் சுற்றி தளம் அமைக்கப்பட்டு, கடலிலேயே பெரிய கார்டன் இருப்பது போன்ற வசதியை ஏற்படுத்தப்போகிறார்கள். கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்திலும், கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்திலும் இந்த சிலை அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. மெரினா கடலில் இப்படி ஓர் அழகிய அமைப்பை ஏற்படுத்துவது சுற்றுலா துறையை மேம்படுத்துவதோடு, உலகத் தரத்தில் இந்தக் கட்டுமானம் உருவாக்க இருப்பதாகச் சொல்லி, இதற்கு மொத்தமாக 81 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர். கடலில் நினைவுச் சின்னம் அமைவதால் ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கு மாற்றாக சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளனர்.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் சுந்தர்ராஜனிடம் பேசினோம். அவர்,

``கலைஞருக்கு நிச்சயமாக நினைவுச் சின்னம் வேண்டும். ஆனால், அதைக் கடலில் வைக்க வேண்டாம் என்பதே எங்கள் கோரிக்கை. இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011-ன் படி பகுதி IV(A) என வரையறுக்கப்பட்டுள்ளது.
கடலோர ஒழுங்குமுறை மண்டலம் 2011-ல் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் (Exceptional cases) மட்டுமே நினைவிடங்கள் / நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியும் பல்வேறு நிபந்தனைகளுடன் மட்டுமே வழங்கப்படும்.

இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், அபாய மதிப்பீடு ஆய்வு, பேரிடர் மேலாண்மைத் திட்டம் மற்றும் அவசரகால செயல்திட்டம் தயாரித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திய பின்னர்தான் இந்த அனுமதி பெற முடியும்.
விதிவிலக்கான வழக்கு
CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் (Exceptional cases) மட்டுமே நினைவிடங்கள் / நினைவுச் சின்னங்கள் அமைக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், கலைஞரின் நினைவாக அமைக்கப்படும் இந்த பேனா வடிவ சிலை Exceptional case இல்லை. ஏற்கெனவே நினைவிடம் அமைந்திருக்கும் வளாகத்துக்குள்ளாகவே பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கு போதுமான இடம் உள்ளது, அப்படி இருக்கும்போது கடலுக்குள் அமைப்பதை Exceptional case என்று கூற முடியாது.

காலநிலை மாற்றம்
மெரினா கடற்கரையில் தொடர்ச்சியாகப் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிலும் காலநிலை மாற்றம் மற்றும் சென்னையையொட்டி கடலுக்குள் எழுப்பப்பட்ட துறைமுகங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களால் மெரினா கடற்கரையில் அதிகமாக மணல் சேர்ந்து (Accretion) வருகிறது.
மத்திய புவி அறிவியல் துறை வெளியிட்ட ``National Assessment of Shoreline Changes along Indian Coast” என்கிற ஆய்வறிக்கையில் (பக்கம் 40) சென்னையில் குறிப்பாக, மெரினா கடற்கரையில் அதிகமாக மணல் சேர்ந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் மெரினாவையொட்டிய கடலுக்குள் இவ்வளவு பெரிய கட்டுமானத்தை அமைத்தால் இன்னும் சில பத்தாண்டு களுக்குப் பின்பாக அக்கட்டுமானம் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மீனவர்களுக்கான பாதிப்பு
மீனவ சங்கங்கள் இத்திட்டம் குறித்து எழுப்பியுள்ள விஷயங்களை அரசு தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, ஊரூர்குப்பம் மீன்பிடிப்போர் கூட்டுறவு சங்கமானது மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு இத்திட்டத்தை அரசு கைவிடக்கோரி கடிதம் எழுதியுள்ளது. அதில் `கடலிலும் கடற்கரையிலும் திட்டங்களைக் கொண்டு வரும்போது அந்தந்த மாவட்டங்களில் மீனவர்களுக்கு பாதிப்பு உள்ளதா, இல்லையா? என்பதை அறிந்துகொள்ளவே கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2011 பத்தி 6(c)-ல் மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை குழுமத்தில் (DCZMA) மூன்று மீனவ பிரதிநிதிகள் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், 21 ஆண்டுகளாகியும் DCZMA -ல் மீனவப் பிரதிநிதிகள் ஒருவர்கூட கிடையாது. மீனவ பிரதிநிதிகள் இல்லாமலேயே கடலிலும் கடற்கரையிலும் அரசால் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களின் மீன்பிடி தகவல்களை அரசு முறையாகக் கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்யாமல் கடல் நடுவே பேனா நினைவுச் சின்ன திட்டத்தை அமைத்தால் கரைத்தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் மற்றும் நடுக்கடலை நம்பியுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டுமெனவும், மீனவர்களின் மீன்பிடி இடங்களை சட்டத்தில் கூறியுள்ளபடி TNSCZMP-ல் பதிவு செய்ய வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்' என மீனவர் சங்கம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் கலைஞர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியது. அப்படி ஒரு தலைவரின் பெருமையைக் கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைத்துதான் போற்ற வேண்டும் என்பதில்லை. மாறாக, மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் போன்று ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலம் கலைஞரின் நினைவைப் போற்றலாம்.
மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறினார்.
`திருவள்ளுவர் சிலை கடலில் தானே அமைக்கப்பட்டுள்ளது?' என்று கேட்டதற்கு, ``அது கடலில் இயற்கையாக உள்ள பாறையின் மீது அமைக்கப்பட்டது. அதனால் எந்த பாதிப்பும் இல்லை" எனக் கூறினார்.
`கடலுக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா போன்ற கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக அரசு இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. வெளியான தகவல்கள் வெறும் பத்திரிகைகளில் வந்த செய்திகள்தான்' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் இப்போது தெரிவித்துள்ளார்.