Published:Updated:

யூரோ டூர் 39: பின்லாந்து - சிறந்த கல்வி முறை; தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடு!

பின்லாந்து
News
பின்லாந்து

பின்லாந்து கல்வி முறையில் 9 ஆண்டுகள் மட்டுமே கட்டாயக் கல்வி உள்ளது. அதன் பிறகு மாணவர்கள் கல்வி மற்றும் தொழில் ரீதியாக தங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

Published:Updated:

யூரோ டூர் 39: பின்லாந்து - சிறந்த கல்வி முறை; தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடு!

பின்லாந்து கல்வி முறையில் 9 ஆண்டுகள் மட்டுமே கட்டாயக் கல்வி உள்ளது. அதன் பிறகு மாணவர்கள் கல்வி மற்றும் தொழில் ரீதியாக தங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பின்லாந்து
News
பின்லாந்து
ஸ்காண்டிநேவிய நாடுகள் ஐரோப்பாவின் பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல, அதன் அரசியல் மற்றும் கலாசார உறுதிப்பாட்டுக்கும் பெரும் பங்கு வகிக்கின்றன. சர்வதேச அரங்கில் ஐரோப்பாவின் புகழ் மேலும் மேலும் வளரவும், ஓங்கவும், நிலைக்கவும் முக்கிய பங்களிப்பது ஸ்காண்டிநேவிய நாடுகள். அனைவருக்கும் சமமான கல்வி மற்றும் மருத்துவம், மாசற்ற சூழல், ஊழலற்ற அரசு, உயர்ந்த வாழ்க்கைத் தரம் என்று எல்லா ஏரியாவிலும் சிக்ஸர் அடிக்கும் ஸ்காண்டிநேவிய நாடுகளின் வரிசையில் இவ்வாரம் பின்லாந்து.

பின்லாந்தில் பிறப்பது, சிறப்பான ஒரு ஜாக்பாட்டை வென்றதற்குச் சமமானது என்று ஒரு பழமொழி உள்ளது. அப்படியென்ன அதிசயம் புதைந்துள்ளது இங்கே?

பின்லாந்து

உலகின் மிகச் சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடாகவும், உலகின் மகிழ்ச்சியான நாடாகவும், மிகத் தூய்மையான காற்றையும், சிறந்த சூழலையும் கொண்ட நாடாகவும் பிரபலம் பெரும் பின்லாந்து ஐரோப்பாவை அழகுபடுத்தும் ஸ்காண்டிநேவிய மகுடம்.

ஆரம்பத்தில் ஸ்வீடனின் ஒரு பகுதியாகவும் பின்னர் ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாகவும் இருந்த பின்லாந்து 1917-ல் சுதந்திரம் பெற்றது. 1995-ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து 1999-ல் யூரோவை ஏற்றுக்கொண்டது. டிசம்பர் 2019-ல், பின்லாந்தின் சமூக ஜனநாயகக் கட்சியின் சன்னா மரின் உலகின் இளைய பிரதமரானார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக, பின்லாந்து 46 முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்களை நடைமுறையில் கொண்டுள்ளது.

பின்லாந்து
பின்லாந்து

இயற்கையான saunas, ரெயின்டீர்கள், Nokia மொபைல், சாண்டா கிளாஸ் கிராமம் எனச் சில உலகப்புகழ் பெற்ற விஷயங்களுக்குப் பெயர்போன பின்லாந்து 187,888 ஏரிகளைக் கொண்டு ஆயிரம் ஏரிகளின் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. அரோரா பொரியாலிஸ் என அழைக்கப்படும் Northern Lights-களின் கண்கவர் காட்சிகளுக்குப் பிரபலமான பின்லாந்து, பூமியின் இந்திரபுரி! அழகிய ஏரிகள் மற்றும் அடர்த்தியான காடுகளைக் கொண்ட பின்லாந்து இயற்கை உலகுடன் ஆழ்ந்த தனிப்பட்ட தொடர்பைப் பேணுகிறது. பின்லாந்து தனது விரிந்து பரந்த வனாந்தரங்களை எந்தத் தடையும் இன்றி திறந்து வைத்துள்ளது. ஆனால் அந்த இயற்கையில் மீன்பிடிக்கவோ அல்லது வேட்டையாடவோ வேண்டாம், விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் நிம்மதியாக வாழவிடுங்கள் என்ற சட்டத்தையும் கறாராக அமல்படுத்துகிறது.

விவேகமான பொருளாதாரக் கொள்கையைக் கொண்ட பின்லாந்து, அரசாங்கப் பத்திரங்களுக்கான குறைந்த வட்டி விகிதங்கள், வர்த்தகத்திற்கான சாதகமான வணிக சூழல், வலுவான நிறுவனங்கள் என உறுதியான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. பின்லாந்தின் ஜிடிபி வளர்ச்சியானது 2019-ல் 1.2-விலிருந்து இவ்வருடம் 2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதன் பொருளாதார சுதந்திர மதிப்பெண் இவ்வருடம் 78.3 ஆக உள்ளது, அதன் பொருளாதாரம் 2022-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி உலகின் 9வது சுதந்திரமான பொருளாதாரமாகவும், ஐரோப்பா பிராந்தியத்தில் உள்ள 45 நாடுகளில் 6வது இடத்திலும் உள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம், கயோலின் பூசப்பட்ட காகிதம், கார்கள், பெரிய பிளாட்-ரோல்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், போன்றன பின்லாந்தின் முதன்மையான ஏற்றுமதிகளாகும். ஜெர்மனி, ஸ்வீடன், அமெரிக்கா, நெதர்லாந்து, மற்றும் சீனா போன்ற நாடுகளுக்குப் பின்லாந்து முக்கியமான ஏற்றுமதிகளை மேற்கொள்கின்றது.

Northern Lights
Northern Lights
இவை எல்லாவற்றையும்விட முக்கியமாகப் பின்லாந்து என்றால் எல்லாருக்கும் உடனடியாக ஞாபகத்துக்கு வருவது அவர்களது உலகத் தரம் வாய்ந்த கல்வி அமைப்பு. தொடர்ச்சியாக உலகின் மிகச்சிறந்த கல்வித் திட்டத்துக்கான முதல் இடத்தை தட்டிச் செல்லும் பின்லாந்தில் அப்படி என்னதான் புதிதாக கற்றுக்கொடுத்து விடுகிறார்கள்?

உண்மையைச் சொன்னால் நம் நாடுகளைப் போலப் பிள்ளைகளை பரீட்சைக்கு தயார்ப்படுத்தும் இயந்திரமாக அவர்கள் வளர்ப்பதில்லை. ஆய கலைகள் அறுபத்து நான்கையும் தம் குழந்தை கற்றுத் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் எனத் துடிக்கும் நம் நாட்டு பெற்றோர் போல அவர்கள் இல்லை. போர்டில் எழுதியதை நோட்டில் பார்த்து காப்பி செய்து மனனம் பண்ணி ஒப்புவிக்கும் கிளிப்பிள்ளை கல்வி முறை அங்கு இல்லை.

கல்வி அனைவருக்கும் சம உரிமையாகக் கருதப்படுவதால், ஃபின்னிஷ் குடிமக்கள் மற்றும் EU/EEA நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இலவச கல்வி அணுகலை (முதன்மை முதல் உயர்நிலை வரை) ஃபின்னிஷ் அரசு வழங்குகிறது. சமத்துவத்தை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முழுமையான கற்பித்தல் மற்றும் கற்றல் சூழல் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் ஆசிரியரால் உருவாக்கப்பட்ட தர நிர்ணய முறையுடன் தனித்தனியாகத் தரப்படுத்தப்படுவதால், 'Ranking System' இங்கு இல்லை. மேலும், பள்ளிகளின் பல்வேறு வரம்புகளின் மாதிரிக் குழுக்களின் மூலம் ஒட்டுமொத்த முன்னேற்றம் கல்வி அமைச்சகத்தால் வரைபடமாக்கப்படுகிறது.

நம் நாடுகளைப் போலப் பிறந்து முதலாவது வருடமே குழந்தைகளை பிளே ஸ்கூல், LKG, Kindergarten எனக் கொண்டு போய் அவர்களைச் சேர்ப்பதில்லை. ஃபின்னிஷ் குழந்தைகள் ஏழு வயதை எட்டும்போதுதான் தங்கள் கல்விப் பயணத்தை, அதாவது பள்ளிப்படிப்பைத் தொடங்குகிறார்கள். அதுவரை கற்றல் என்பது விளையாட்டு மூலம் அவர்களின் உடல், உள வளர்ச்சி மற்றும் 'Fine & Gross Motor Skills' போன்றவற்றைச் சீர்படுத்தி, மேம்படுத்தும் பயிற்சிகளே வழங்கப்படுகின்றன. ஏழு வயதில்தான் ஃபின்னிஷ் குழந்தைகள் பென்சில் பிடித்து முதல் எழுத்தை எழுதவே கற்றுக்கொள்கிறார்கள்.

பின்லாந்து கல்வி முறை
பின்லாந்து கல்வி முறை

அதேபோல சிறப்பு கற்பித்தல் பள்ளிகளிலிருந்து முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கண்டிப்பாக ஆசிரியர் பதவிகளைத் தேர்வு செய்ய முடியும். அதன்பிறகும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஒரு தனிப்பட்ட அதிபர் ஒதுக்கப்படுவார். அவர் அந்த ஆசிரியருக்குத் தொடர்ந்து பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவார். உலகில் ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் முதல் நாடும் பின்லாந்துதான்.

கல்வி நிறுவனங்களுக்கிடையேயான எந்தவொரு போட்டியையும் அகற்றுவதன் மூலம், கல்வி முன்னேற்றத்தின் செயற்கை அளவுருக்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, மாறாக ஒத்துழைப்பு உருவாக்கப்படுகிறது. ஒரு பாடசாலையிலிருந்து விலகி வேறொரு இடத்துக்கு இடம்பெயரும் ஒரு மாணவன், புதிய பாடசாலையில், விட்ட இடத்திலிருந்து, அதே கல்வியை, அதே தரத்துடன் தொடர்வான். இந்த விதத்தில் அனைத்து பாடசாலைகளும் தங்களுக்குள் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுகின்றன.

இங்கு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் என்று எதுவும் இல்லை என்பதே உண்மை. வீட்டுப்பாடத்தைத் தவிர, குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்தல் அல்லது நன்றாகத் தூங்குவது போன்ற பல காரணிகளும் குழந்தையின் கல்விச் சாதனையை மேம்படுத்தலாம் என்று பின்னிஷ் மக்கள் நினைக்கிறார்கள். எனவே, பின்லாந்து கல்வி முறையானது சமமான கல்வி வாய்ப்புகளை வலியுறுத்த ஒவ்வொரு மாணவருக்கும் அத்தியாவசியமான வாழ்க்கைத் திறன்கள் மற்றும் அடிப்படைத் துறைகளின் அறிவைக் கொடுக்கிறது.

பின்லாந்து கல்வி
பின்லாந்து கல்வி
பின்லாந்து கல்வி முறையில் 9 ஆண்டுகள் மட்டுமே கட்டாயக் கல்வி உள்ளது. அதன் பிறகு மாணவர்கள் கல்வி மற்றும் தொழில் ரீதியாக தங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிய ஊக்குவிக்கப்படுகிறார்கள். கல்லூரிக் கல்விக்குத் திட்டமிடுபவர்கள், பழைய பட்டப்படிப்புக்குச் சிறந்த மாற்றீடாக, தொழிற்கல்விப் பள்ளிகள், பல்கலைக்கழகக் கல்வி அல்லது பயிற்சி வகுப்புகள் எனத் தொழில்முறை விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம்.

மாணவர்களிடம் குழுப்பணி, ஒத்துழைப்பு மற்றும் குழு உணர்வின் திறன்களை வளர்ப்பதன் மூலம் பள்ளிகளில் போட்டியைவிட ஒத்துழைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது பின்னிஷ் கல்வித் துறை. மாணவர்களுக்கு அவர்களின் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்ள அவகாசம் அளிக்கப்படுகின்றது. இதுவும் பின்லாந்தில் உலகிலேயே சிறந்த கல்வி முறை இருப்பதற்கான ஒரு முக்கிய காரணம்.

எல்லாவற்றிலும் சிறந்ததாக இப்போது போற்றப்படும் ஃபின்னிஷ் கல்வி முறை ஆரம்பத்திலிருந்தே இவ்வளவு சிறப்பானதாக இருந்ததா என்றால் இல்லை. நாம் வரலாற்றில் பின்னோக்கிச் சென்றால், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்புதான் பின்னிஷ் அரசாங்கம் தனது கல்வி முறையை ஆராய்ந்து, எதிர்கால ஆண்டுகளில் கட்டாயமாகத் தேவைப்படும் என்ற ஊகத்தில், நிரூபிக்கப்படாத, சோதிக்கப்படாத பல சீர்திருத்தங்களைச் சேர்த்தது. அடிப்படை ஆரம்பக் கல்வி நிலையிலிருந்து உயர்கல்வி நிலைக்குச் செல்லும் முழுக் கட்டமைப்பும் மறுவடிவமைக்கப்பட்ட போது, அது மாணவர்களின் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் குறிக்கோளுடன் மீண்டும் உருவாக்கப்பட்டது. இன்று அந்த மாற்றம் உலகுக்கே எடுத்துக்காட்டான ஒன்றாக உருவெடுத்து உள்ளது.

கல்வி
கல்வி

உலகில் கல்வியறிவு அதிகம் உள்ள நாடுகளில் பின்லாந்து 8வது இடத்தில் உள்ளது. உலகின் உயர்நிலைப் பள்ளி நிறைவு விகிதத்தில் பின்லாந்து மிக உயர்ந்த தரவரிசையில் உள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய போட்டி ஆய்வு, உலகில் மிகவும் நன்கு வளர்ந்த கல்வியைக் கொண்டதாகப் பின்லாந்தைத் தரவரிசைப்படுத்துகிறது.

உலகில் வாழச் சிறந்த நாடுகள் எவை என்பதைக் காட்டும் உலக மகிழ்ச்சி அறிக்கையை (Happiness Index) ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா சபை வெளியிடுகிறது. 2022-ன் அறிக்கையில் பின்லாந்து மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதாவது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாகப் பின்லாந்து முடிசூட்டப்பட்டது. இது ஒன்றே பின்லாந்து வாழ்வதற்கு எவ்வளவு சிறப்பான இடம் என்பதைக் காட்டுகிறது.

இவ்வளவு சிறப்பாக வாழும் பின்லாந்து தற்போது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது. ஏற்கெனவே நேட்டோவில் இணையப் போவதாய் சொன்னதற்காகவே ரஷ்யா - உக்ரைன் இடையே பெரும் கலவரம் வெடித்துள்ள நிலையில், தற்போது ரஷ்யாவின் நெருங்கிய எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து தானும் நேட்டோவில் இணையப் போவதாகச் சொல்லியுள்ளது. பின்லாந்து இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நிமிடமே ரஷ்யா, பின்லாந்துக்கான மின்சக்தியை நிறுத்தியுள்ளது. இந்த முடிவை மாற்றாவிட்டால் ரஷ்யாவின் அடுத்த இலக்கு பின்லாந்தாக மாறலாம்.

இவ்வளவு காலமும் பின்லாந்து நாட்டில் மக்கள் அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நிலையில், அந்த நிம்மதியில் பின்லாந்து அரசு தீயை வைக்குமா இல்லை தனது முடிவை மாற்றிக்கொள்ளுமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நேட்டோ - பின்லாந்து
நேட்டோ - பின்லாந்து

ஐரோப்பாவில் பாலரும் தேனாறும் மட்டுமே ஓடுகின்றதா?

ஐரோப்பா என்றாலே கொழிக்கும் செல்வம், முன்னணி தொழில்நுட்பம், பிரமிக்கும் வளர்ச்சி, அனைவருக்கும் சம உரிமை, சிறப்பான கல்வி முறை, ஊழல் இல்லாத சுத்தமான அரசு, நேர்மையான மக்கள், மாசில்லாத இயற்கை, நவீன சுகாதார சேவைகள் என எல்லாமே நல்ல நேர்மறையான விஷயங்கள் மட்டும்தானா? எல்லா விஷயங்களும் நிறைவாக அமைந்துவிட்டால் இவர்களுக்கு என்று பிரச்னைகளே இல்லையா?

பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து, பின்லாந்து, நார்வே, பெல்ஜியம் என உலக அரங்கில் பலமும் அதிகாரமும் கொண்ட இவை மட்டும்தானா ஐரோப்பாவின் முகங்கள்?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை அடுத்த வாரம் முதல்...

யூரோ டூர் போலாமா?!