காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன். இவரின் மகன் திருமகன் ஈ.வெ.ரா (46). ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வான இவர், நேற்று இரவு வழக்கம் போல படுக்கைக்குச் சென்றிருக்கிறார்.

சுமார் 12 மணியளவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, அவரின் உடல் தற்போது ஈரோட்டில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதில், ``46 வயது மட்டுமே நிரம்பிய திருமகன் ஈ.வெ.ரா-வின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரின் தந்தை இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கனத்த இதயத்துடன் அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.