உலக அளவில் இந்தியர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் நாடாக கனடா கருதப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு ஆகிய நாடுகளைத் தொடர்ந்து கனடாவில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்துவருகின்றார். கனடா மக்கள்தொகையில் 5 சதவிகிதத்துக்கும் மேல் இந்தியர்கள் இருக்கின்றனர்.
கொரோனா காரணமாக கனடாவில் பொருளாதாரம் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. இதையடுத்து, 2021-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்ததும், தொழில் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், அங்கு உடனடியாகப் பணிபுரிவதற்கு தேவையான ஊழியர்கள் கிடைக்கவில்லை. இதனால் கனடா அரசு, "கனடாவில் பட்டப்படிப்பு முடித்த வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் படிப்பு முடிவடைந்தாலும், 18 மாதங்கள் கனடாவில் தங்கிக்கொள்ளலாம். அவர்களுக்குப் பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். 18 மாதங்கள் பணி விசா நிறைவடைந்த பிறகும் அவர்கள் கனடாவில் தங்கி வேலை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில், இந்த அறிவிப்பு இந்திய மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் இந்திய மாணவர்கள் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இந்தச் சூழலில், 18 மாதகாலப் பணி விசா முடிவடைந்ததும், பல நிறுவனங்களில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், இந்திய மாணவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, கனடாவில் தங்கவும் அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர்கள், ``தேவை முடியும் வரை எங்கள் உழைப்பைச் சுரண்டினார்கள். மிகச் சொற்ப ஊதியம் கொடுத்து எங்களை வேலை வாங்கினார்கள். தற்போது அவர்களின் தேவை முடிந்ததும், எங்களைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். இப்போது எங்களுடைய பணியில் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களை பணியமர்த்த நிறுவனங்கள் முடிவுசெய்திருக்கின்றன. இந்த முடிவால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறோம்" எனத் தெரிவித்தனர்.