உங்களுக்கான இடத்தைப் பிடிப்பது எப்படி? - சாமானிய பெண்களுக்கு சாதனைப் பெண்களின் மெசேஜ்

முதலில் அடுத்தவர் என்ன சொல்வார் என்ற பயத்தை வெல்வதற்கு முன், நமக்குள் ளேயே நாம் வைத்திருக்கிற சந்தேகங்களை ஒழிக்க வேண்டும்.
குடும்பத்தினருக்கு உணவு பரிமாறி அனை வரும் சாப்பிட்ட பிறகே தான் சாப்பிடும் நிலைதான் பெரும்பாலான பெண்களுக்கு இன்றளவும் நீடிக்கிறது. உணவருந்தும் மேசையிலேயே பெண்கள் தங்களுக்கான இடத்தை சரிசமமாகப் பெற முடியாத சூழல் நீடிக்கும்போது... வேலையில், அதிகாரத்தில், அரசியலில், தொழிலில் எப்படி தங்களுக்கான இடத்தைப் பிடிக்க முடியும்? இதுகுறித்து ‘A Seat at the Table’ என்ற தலைப்பில் சமீபத்தில் சென்னையில் நடந்த குளோபல் தமிழ் ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்கள் மாநாட்டில் விவாத அமர்வு ஒன்று நடத்தப்பட்டது.
`சாம்பியன் வுமன் குளோபல் அட்ஜஸ்ட் மென்ட்ஸ் ஃபவுண்டேஷன்' தலைவர் ரஞ்சனி மணியன், `ஃபிடென்' அமைப்பின் (FITEN - ஃபெட்னா இன்டர்நேஷனல் தமிழ் தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு) துணைத் தலைவர் ஜானகி கொவ்தா, நடிகை அனு ஹாசன், எழுத்தாளர் கல்பனா மோகன், `விஐடி' உதவி துணைத் தலைவர் காதம்பரி விஸ்வநாதன், எஸ்பிஐ வங்கி அட்வைசர் சந்தியா சேகர் உள்ளிட்டோர் விவாதத்தில் கலந்து கொண் டனர். வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், அவற்றை எதிர்கொண்ட விதம் பற்றி பேசினார்கள்.
இந்த விவாதத்தில் முக்கியமாக இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. ஒன்று ‘ஃபோப்போ’ (FOPO - Fear of People’s Opinion). அதாவது ‘நான்கு பேர் நான்கு விதமாகப் பேசு வார்கள்’ என்ற பயம். இரண்டு ‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ (Imposter Syndrome). அதாவது `நம்மால் இது முடியுமா, நமக்குத் திறமை இருக் கிறதா' என்று நம் திறன்கள் மீது நாமே சந்தேகப் படுவது.
‘`முதலில் அடுத்தவர் என்ன சொல்வார் என்ற பயத்தை வெல்வதற்கு முன், நமக்குள் ளேயே நாம் வைத்திருக்கிற சந்தேகங்களை ஒழிக்க வேண்டும். அதற்கு நம்மை பற்றி நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய திறன்களை முழுமையாக நம்ப வேண்டும். தவறு நடந்துவிடுமோ, தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற கேள்விகளுக்கு இடம்கொடுக்காமல் முயற்சி செய்து பார்த்து விட வேண்டும். தவறுகள், தோல்விகளி லிருந்து கற்றுக்கொண்டு இன்னும் சிறப்பாக முயற்சி செய்யலாம். ஆனால், நம்மீதுள்ள சந்தேகத்தில் முயற்சியே செய்யாமல் விட்டு விட்டால் அதுதான் நமக்கு உண்மை யான தோல்வி என்பதை மனதில் ஆழமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்’’ என்றார் ரஞ்சனி மணியன்.
அடுத்ததாகப் பேசிய நடிகை அனு ஹாசன், “எல்லா இடங்களிலும் சவால்கள் நிறைந்திருக் கின்றன. உதாரணத்துக்கு என்னையே எடுத்துக் கொள்ளலாம். சினிமா, தொழில் என எங்கு சென்றாலும் ஏற்கெனவே என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே ஜாம்பவான்களாக இருக் கிறார்கள். போட்டியும் பயமும் சந்தேகமும் வரத்தான் செய்யும். அதையெல்லாம் கடந்து தான் நான் முன்னேற வேண்டியிருக்கிறது. பெண்கள் எதைத் தொடங்குவதாக இருந்தாலும் பலருடைய எதிர்ப்புகளை, விமர்சனங்களை, கருத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எல்லோர் சொல்வதையும் கேட்டு நடக்க வேண்டியதில்லை. ஆனால் துறை சார்ந்தும், நம்மை பற்றியும் நன்றாகத் தெரிந்தவர்கள் சொல்லும் கருத்துகளின் உண்மைத் தன்மை யைப் பாருங்கள். அத்தகைய நபர்களை உடன் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அவர் களுடைய கருத்துகள் உங்களை உயர்த்தக் கூடியவையாக இருக்கும்'' என்றார்.

எழுத்தாளர் கல்பனா மோகன் பேசுகையில், “ஒவ்வொரு முறையும் நான் எழுதுவதை பப்ளிஷருக்கு அனுப்பும்போது அவற்றில் பெரும்பகுதியை நீக்கிவிடுவார்கள். நான் எழுதுவதில் எது முக்கியம், எது முக்கியமில்லை என்பது நன்றாகத் தெரிந்தவர் நான்தான். ஒரு கட்டத்தில் நான் பத்திரிகைகளுக்கு எழுதுவதை விட்டுவிட்டு புத்தகம் எழுதி, பிரசுரிக்க ஆரம்பித்தேன். நம்முடைய திறன்களை பற்றி, நம்முடைய இலக்குகள் பற்றி நமக்குத்தான் நன்றாகத் தெரியும். நாம் எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். கட்டுப்பாடுகள், வரம்புகள் என ஆயிரம் தடைகளை இந்தச் சமூகம் நமக்கு முன்னால் வைக்கும். எல்லா வற்றையும் மீறித்தான் நமக்கான இடத்தை நாம் அடைய வேண்டும்” என்றார்.
விஐடி உதவித் துணைத் தலைவர் காதம்பரி விஸ்வநாதன் பேசுகையில், “தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக் காளர்கள் எண்ணிக்கை அதிகம். அந்த வகை யில் தொழில்முனைவில் பெண்களுக்கான இடம் பற்றி தமிழ்நாட்டில் பேசுவது நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவரும். பல துறைகளில் பெண்களுக்கான தேவை மிகவும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். தொழில்நுட்பம்தான் எதிர்காலம். எனவே, பெண்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
முன்னேறுவோம்!