தமிழ் திரையுலகில் சிறிய பட்ஜெட் படம் முதல் `பொன்னியின் செல்வன்' போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம் லைகா. சுபாஸ்கரனுக்குச் சொந்தமான இந்த நிறுவனம் தற்போது கமலின் `இந்தியன் 2', ரஜினியின் `லால் சலாம்', அஜித்தின் `விடாமுயற்சி' என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரித்துவருகிறது.

இந்த நிலையில், சென்னையில் லைகா தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். குறிப்பாக சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உட்பட லைகா நிறுவனத்துக்குச் சொந்தமான எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடந்துவருகின்றன.

மேலும் அமலாக்கத்துறையின் இந்த திடீர் ரெய்டு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து ரெய்டு குறித்து காரணம் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. அதேசமயம், லைகா நிறுவனத்தின் தரப்பிலிருந்தும் இதுவரை அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.