தமிழகம் முழுவதும் நேற்று 16 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆட்சியர்கள் மாற்றம் என்பது எப்போதும் நடக்கும் நிகழ்வு தான் என்றாலும் இந்த முறை மாவட்ட ஆட்சியர் மாற்றத்தில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், அதற்கு அடுத்ததாக உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும் கணவன், மனைவியான விஷ்ணு சந்திரன் மற்றும் ஆஷா அஜித் ஆகியோரை மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு நியமித்துள்ளதுதான் தனி கவனத்தை ஈர்த்துள்ளதற்கான காரணம்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ், நாகை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை நகராட்சி நிர்வாக இணை இயக்குநராக இருந்த விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த மதுசூதனன் ரெட்டி மாற்றப்பட்டு, சென்னையில் நிர்வாக இயக்குநர் மற்றும் வழிகாட்டுதல் பிரிவு அதிகாரியாக இருந்த ஆஷா அஜித் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆஷா அஜித். கேரள அரசின் கல்வித் தொலைக்காட்சியான விக்டர்ஸ் சேனல் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குதல், கல்வியாளர்களிடம் நேர்காணல் நடத்துதல் என பிஸியாக இயங்கியவர். 2015 ஜூலை 4-ம் தேதி, சிவில் தேர்வில் 40-வது ரேங்க் பெற்று வெற்றிபெ ற்றார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் துணை ஆட்சியராக பணிபுரிந்துள்ளார். பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக இருந்துள்ளார். ஆஷா அஜித்தின் தந்தை அஜித் குமார், கேரள மாநில தகவல் மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றவர். ஆஷா அஜித், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஷா அஜித்தின் கணவர் விஷ்ணு சந்திரனும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் நாகர்கோவில் துணை ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். பரமக்குடியில் வருவாய் கோட்டாட்சியராகவும் இருந்துள்ளார்.
தற்போது ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை என அடுத்தடுத்து உள்ள மாவட்டங்களில் கணவன், மனைவி இருவரும் ஆட்சியர்களாகப் பொறுப்பேற்க உள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.