ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தென்காசி தொகுதி எம்.பி தனுஷ்குமார், தங்கபாண்டியன் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசும்போது, ``கைத்தறி நெசவாளர்களாக இருந்த நாம், தற்போது விசைத்தறி நெசவாளர்களாக இருக்கிறோம். தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் நெசவாளர்களுக்கு 750 யூனிட்டாக இருந்த இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயர்த்தி வழங்கப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு அடுத்தபடியாக நெசவாளர்கள்தான் வறுமையில் இருக்கின்றனர். இதை அறிந்துதான் முதல்வர் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிவருகிறார்" எனப் பேசினார்.
நிகழ்ச்சியில் ஐ.லியோனி பேசுகையில், ``பெண்கள் கையில் பொருளாதாரத்தையும், வீரத்தையும், கல்வியையும் கொடுத்தது தி.மு.க. அரசு மருத்துவமனைகளில் ஆண்களைவிட பெண் மருத்துவர்கள் அதிகமாக இருப்பதற்குக் காரணம் நீதிக்கட்சி போட்ட பாதையை திராவிட மாடல் ஆட்சி பின்பற்றுவதே. புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.500 கோடி செலவில் 77 லட்சம் மாணவிகள் உயர் கல்வி பயின்றுவருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் எந்தவிதமான கஷ்டத்தையும் அனுபவிக்காமல் அரசியலுக்கு வந்தவர்கள். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை அனைத்துக்கும் நீதிமன்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. வருங்காலத்தில் நீதிபதியைப் பொதுச்செயலாளராக மாற்றும் நிலை வந்தாலும் வரலாம்" எனப் பேசினார்.

கூட்டத்தின் நிறைவில், மேடையின் முன்புறம்வைத்து டோக்கன் முறையில் பணப் பட்டுவாடா நடைபெற்றது. இந்த நிலையில் சிறிது நேரத்திலேயே, பணம் பெறுவதற்கு போட்டா போட்டி ஏற்பட்டு அந்தப் பகுதியே களேபரமானது. இதனால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் தள்ளு முள்ளு உருவாகி, தெருவோரம் இருந்த கழிவுநீர்க் கால்வாயினுள் பெண்கள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.