
- தேன்மொழி

டாஸ்மாக் சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்கும் ஆண்டவர்!
கடந்த வாரம் நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் ‘தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகின்றனவா’ என வழக்கமான வாகன சோதனை நடத்தியிருக்கின்றனர் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாகச் சில்லறைக் காசுகள், 10, 20 ரூபாய் நோட்டுகள் லட்சக்கணக்கில் இருந்திருக்கின்றன. மூட்டைகட்டி பணத்தைக் கொண்டுவந்த நபரிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால், பணத்தைப் பறிமுதல் செய்து, அந்த நபரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். பிரசித்திபெற்ற முருகன் கோயில் ஒன்றின் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைத் தொகையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சில்லறைக் காசுகள்தானாம் அவை. “டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளின் சில்லறைத் தேவைகளுக்காக இவற்றைக் கொண்டுவந்து கொடுத்தால், 10% கமிஷன் கிடைக்கும். அதற்காகக் கொண்டுவரப்பட்ட தொகைதான் இது” எனச் சம்பந்தப்பட்ட நபர் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.


பூங்காவுக்குள்ளும் அரசியல்!
புதுக்கோட்டையில், அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிக்கு அருகே சுமார் ரூ.70 லட்சம் செலவில், செயற்கை நீரூற்று, குழந்தைகளுக்கான அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், வைஃபை வசதிகள் என ‘சத்யமூர்த்தி பூங்கா’ கடந்த 2019-ம் ஆண்டில் கோலாகலமாகத் திறக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் ‘பரமாரிப்புப் பணிகளுக்காக’ மூடப்பட்ட பூங்கா அதன்பிறகு திறக்கப்படவே இல்லை. பல லட்சங்கள் செலவுசெய்து கட்டப்பட்ட பூங்கா, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. ‘‘ எங்கள் ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்டது என்பதாலேயே ஆளும் கட்சியினர் இதனைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். கொடுமையின் உச்சமாக இப்போது, இதே பூங்காவுக்கு எதிரே, ரூ.1 கோடி மதிப்பீட்டில் பேனா சிலையுடன் புதிய பூங்கா கட்டும் பணியில் புதுக்கோட்டை நகராட்சி மும்முரம் காட்டிவருகிறது’’ என்று குமுறுகிறார்கள் அ.தி.மு.க-வினர். ‘அப்படியானால் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக எதிர்த்துப் போராடலாமே?” என்று கேட்டால், “தற்போதைய டெண்டரின் பின்னணியில் எங்க கட்சியின்...” என்று தலையைச் சொறிகிறார்கள்!

‘சாக்கடை’ அரசியல்!
மக்கள் நடமாட்டம் மிகுந்த திண்டிவனம் ரவுண்டானா பாலம் பகுதியில், வணிக வளாகங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையோரத்திலேயே தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இது போதாதென்று பொது கட்டணக் கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரும் ஒன்று சேர்ந்துவிடுவதால், கொளுத்தும் வெயில், துர்நாற்றத்துக்கிடையே பேருந்துக்குக் காத்திருக்கும் பயணிகளின் நிலை பெரும் துயரமாக இருக்கிறது. இந்த நிலையில், பயணிகளுக்கு நிழற்குடை கட்டுவதற்காக லோக்கல் எம்.எல்.ஏ நாட்டிய அடிக்கல் மட்டும் அப்படியே நிற்கிறது. விசாரித்தால், ‘எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வின் திட்டம் என்பதால், கழிவுநீரை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டிவருவதாகவும், அதனாலேயே நிழற்குடை அமைக்கும் பணியும் தாமதப்படுகிறது’ என்றும் கிசுகிசுக்கின்றனர். ‘‘இவங்களோட அரசியல் சண்டை, சாக்கடையைவிட பெருங்கொடுமையா இருக்கு...’’ என்று தலையிலடித்துக்கொள்கிறார்கள் பொதுமக்கள்.

பரபரப்பான சாலையில் பைக் ஸ்டன்ட்!
திருச்சி - சென்னை பைபாஸ் சாலை, காவிரி பாலம் என திருச்சியின் முக்கியச் சாலைகளில் கூடும் இளைஞர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக அதிவேகத்தில் பைக்கை விரட்டுவதும், ஒற்றைச் சக்கரத்தை தூக்கியபடியே வீலிங் செய்வதுமாக ஸ்டன்ட் செய்வதோடு, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு அட்ராசிட்டி செய்துவருகின்றனர். இதனால், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் சம்பங்களும் நடந்துவருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில், திருச்சி காவிரி பாலத்தில் பைக் ஸ்டன்ட் செய்த 12-ம் வகுப்பு மாணவனைப் பிடித்த போலீஸார், அவனை வைத்தே ‘பைக் ஸ்டன்ட் செஞ்சு வண்டி ஓட்டுறதால பொதுமக்களுக்கு என்ன பாதிப்புன்னு இப்போதான் எனக்குப் புரியுது. இனிமேல் யாரும் இப்படி வண்டில ஸ்டன்ட் செய்யாதீங்க’ எனப் பேசவைத்து, சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருக்கின்றனர். ஆனாலும், சிட்டிக்குள் ‘பைக் ரேஸ் ஆர்வக்கோளாறுகளின்’ அட்ராசிட்டி குறைந்தபாடில்லை.

மிரட்டிய கும்பல்... வேட்டையாடிய போலீஸ்!
காதலர்களின் தாஜ்மஹாலாக மாறிய வேலூர் கோட்டையில், ‘லவ் ஜிஹாத்’ தகராறில் ஈடுபட்டுவந்த ஏழு பேர் கும்பல், தற்போது சிறைக்குள் அமர்ந்து ‘கம்பி’ எண்ணிக்கொண்டிருக்கிறது. மார்ச் 27-ம் தேதி மூன்று இஸ்லாமிய இளம்பெண்கள், ஆண் நண்பர்களுடன் தனியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அங்கு சென்ற அந்தக் கும்பல், மூன்று ஜோடிகளையும் மடக்கி, ‘‘இஸ்லாமியப் பெண்களை எப்படி நீங்கள் காதலிக்கலாம்... ஹிஜாப்பை அகற்றுங்கள். இல்லையெனில், ஜமாஅத்துக்கு வாருங்கள். கல்யாணம் செய்துவைக்கிறோம்’’ என்று மிரட்டி, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த விவகாரத்தில், குற்றவாளிகள் அனைவரையும் ஒரே நாள் இரவில் வேட்டையாடித் தூக்கியது வேலூர் போலீஸ். இந்தச் சம்பவத்தையடுத்து, கோட்டைக்குள் நிரந்தர காவல் உதவி மையத்தை அமைக்க முடிவுசெய்திருக்கிறதாம் மாவட்ட காவல்துறை!