Published:Updated:

தி.மலை: 400 ஆண்டுகள் பழைமையான மடம் இடிப்பு; வரம்பைமீறிச் செயல்பட்டனரா அரசு அதிகாரிகள்; நடந்தது என்ன?

அம்மணி அம்மன் மடம் இடிப்பு

அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்திருக்கிற நிலையில், 'மடத்தை நாங்கள் இடிக்கவில்லை' என்று மறுத்திருக்கிறார் இணை ஆணையர்.

Published:Updated:

தி.மலை: 400 ஆண்டுகள் பழைமையான மடம் இடிப்பு; வரம்பைமீறிச் செயல்பட்டனரா அரசு அதிகாரிகள்; நடந்தது என்ன?

அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்திருக்கிற நிலையில், 'மடத்தை நாங்கள் இடிக்கவில்லை' என்று மறுத்திருக்கிறார் இணை ஆணையர்.

அம்மணி அம்மன் மடம் இடிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள சென்னசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் சித்தர் அம்மணி அம்மாள். பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வடக்கு கோபுரத்தை, பலரது உதவியைப் பெற்று கட்டிமுடித்தவர் இவர்தான் என்று கூறப்படுகிறது. அதனால், அண்ணாமலையார் கோயிலின் வடக்கு கோபுரமானது, 'அம்மணி அம்மன் கோபுரம்' என்று இவரின் பெயரைக்கொண்டே அழைக்கப்படுகிறது. 17-ம் நூற்றாண்டின் இறுதியில்... ஈசான்ய லிங்க சந்நிதிக்கு எதிரில் இவர் ஜீவசமாதி அடைந்திருக்கிறார். வடக்கு கோபுரத்தின் அருகில் இவரின் பெயரில் மடம் ஒன்றும் இருக்கிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
Picasa

இந்த மடத்தில், வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் தங்கி உணவு உட்கொண்டு, நீராடி, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்துவந்தனர். இந்த மடம், சுமார் 400 ஆண்டுகள் பழைமையானது என்று கூறப்படுகிறது. இந்த மடத்தின் 23,800 சதுர அடி இடத்தை பா.ஜ.க-வின் ஆன்மிகம், ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநில துணைத்தலைவர் டி.எஸ்.சங்கர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 18-ம் தேதி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த மாடி வீடு போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. மேலும், அம்மணி அம்மன் மடத்தையும் இடிக்கும் பணியை அரசுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். 

இது, உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய செயல் என்று கூறி, மடம் இடிக்கப்படுவதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மடத்தை இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அம்மணி அம்மன் மடம் இடிப்பு விவகாரம், திருவண்ணாமலை பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், 19-ம் தேதியும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அரசுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டபோது, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த டி.எஸ்.சங்கர், மடம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, அவர் அறநிலையத்துறை அதிகாரிகளைக் கடுமையாக விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

டி.எஸ்.சங்கர் ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம்
டி.எஸ்.சங்கர் ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம்

இந்த விமர்சனம் குறித்து, அண்ணாமலையார் திருக்கோயிலின் இணை ஆணையர் (பொறுப்பு) குமரேசன் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதைப் பெற்றுக்கொண்ட போலீஸார், ஆறு பேர்மீது வழக்குப்பதிவு செய்து, காளியப்பன், ஏழுமலை, கார்த்தி, டி.எஸ்.சங்கர் ஆகிய நான்கு நபர்களை கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

அம்மணி அம்மன் மடம் இடிப்பு விவகாரம் குறித்து, இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டிருக்கிற அறிக்கையில், "அம்மணி அம்மாளின் மடத்தை இடித்த அறநிலைத்துறையை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த மடம் தெய்வத்திரு. அம்மணி அம்மாள் குடும்பத்தாரைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது. இவரது குடும்பத்தினர் ஒரு டிரஸ்ட்டை வைத்து நிர்வாகம் செய்துவருகின்றனர். இவர்கள் பெங்களூரில் இருக்கின்றனர். இந்த மடம், அறநிலைத்துறைக்குச் சொந்தமானது அல்ல.

சம்பவ இடத்தில் போலீஸ்
சம்பவ இடத்தில் போலீஸ்

இந்த மடத்தை பராமரித்து வந்த வாட்ச்மேனாக இருந்தவர் மடத்தைக் கைப்பற்றி ஆண்டு அனுபவித்துவந்தார். மடம் தனக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடினார். இந்து முன்னணி பேரியக்கத்தின் கௌரவத் தலைவராக இருந்த  இராதாகிருஷ்ணன் அவர்கள், மடத்து டிரஸ்ட்டுக்காக 30 ஆண்டுகள் போராடி, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மடத்தை மீட்டெடுத்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை, அவரின் மகன்தான் இருக்கிறார். இந்த மடத்தை நிர்வகிப்பதற்காக, ஸ்டேட் இந்து முன்னணி டிரஸ்டையும் ஒரு நிர்வாகியாக, ஓரிஜினல் மடத்தின் டிரஸ்ட்டின் சரத்துப்படி சேர்த்து நிர்வாகம் நடந்தது. பின்னர், திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவராக இருந்த ஸ்ரீதர் என்பவர் மடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்தார். இந்து முன்னணி அதை முறியடித்தது. 

மேலும், அமைச்சர் ஏ.வ.வேலுவின் ஆட்கள் ஒருமுறை மடத்தை ஆக்கிரமிக்க முயன்றபோது, கோபால் ஜி பேசியதால் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி ஏ.வ.வேலு மடத்தை கையகப்படுத்துவதைக் கைவிட்டார். அதன் பின்னர், இந்த மடத்தை இந்து முன்னணியின் மாவட்ட தலைவராக இருந்த சங்கர் பார்த்து வந்தார். அவரும் சுயநலவாதியாக மாறி மடத்து நிர்வாகிகளை ஏமாற்றி தனக்காக வீடு கட்டிக்கொண்டார். இந்து முன்னணி தவறை சுட்டிக்காட்டியபோதும் தவறை திருத்திக்கொள்ளாத காரணத்தினால், சங்கரை இந்து முன்னணி மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கியது. 

இந்து முன்னணி அறிக்கை
இந்து முன்னணி அறிக்கை

தொன்மையான இந்த மடத்தை அபகரிக்க சில முக்கிய அரசியல்வாதிகள் நீண்ட காலமாக முயன்றுவருகின்றனர். இவர்கள் எல்லோருமே தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்பதை திருவண்ணாமலை மக்கள் அறிவார்கள். சங்கரின் ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்றியதை இந்து முன்னணி மனப்பூர்வமாக பாராட்டுகிறது. ஆனால், இந்த மடத்தின் தொன்மையை காப்பாற்ற வேண்டும். நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் அமர்வின் தீர்ப்பின்படி அம்மணி அம்மன் பழைமையான கோவிலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்" என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், அம்மணி அம்மன் ஜீவசமாதியைப் பராமரித்துவரும் ரமேஷ் பேசுகையில், "அம்மணி அம்மன் மடம் மொத்தம் 25,000 சதுர அடி பரப்பளவிலானது. அதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடு கட்டப்பட்டிருந்தது 650 சதுரஅடி தான். நீதிமன்ற உத்தரவுப்படி அந்த ஆக்கிரமிப்பை மட்டும் அதிகாரிகள் அகற்றாமல், மடத்தையும் பாதிக்கும் மேல் இடித்துவிட்டார்கள். மடத்திலிருந்த ஆக்கிரமிப்பை அகற்றியதை 100% வரவேற்கிறோம். அதேபோல், மடத்தையும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து புராதான சின்னமாக பராமரித்திருக்க வேண்டும். 

மடம் இடிப்பு
மடம் இடிப்பு

ஆனால், அதிகாரிகள் தற்போது அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டனர். இடிக்கப்பட்ட மடத்தின் பகுதிகளை அரசு மீண்டும் மீட்டுருவாக்கம் செய்து பராமரிக்க வேண்டும். அந்த இடத்தை வேறெந்த பயன்பாட்டுக்காகவும் மாற்றிவிடக் கூடாது. இந்த மடம் புராதானச் சின்னமாகப் பராமரிக்கப்பட வேண்டும்" என்றார்.

ரமேஷ்
ரமேஷ்

இந்தச் சம்பவம் குறித்து, அண்ணாமலையார் திருக்கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரேசனிடம் விளக்கம் கேட்டோம். "நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் முன்னிலையில்தான் ஆக்கிரமிப்பை அகற்றினோம். மடத்தை நாங்கள் இடிக்கவில்லை. பக்கத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடு, கடைகளைத்தான் இடித்தோம். மடத்தை இணைத்தபடி அந்த நபர் கட்டடத்தைக் கட்டியிருந்தார். அதை இடிக்கும்போது மடத்தின் சுவர் உடையத்தானே செய்யும். மீதி பகுதிகள் அப்படியேதான் இருக்கிறது. அதோடு பணியை நிறுத்திவிட்டோம்" என்றார்.