தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்தையடுத்து, நகரத்திலுள்ள அதிகமான மக்கள் பயன்படுத்துவது ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற வாடகை டாக்ஸிகளைத்தான். ஆனால், தனியார் ஆப்கள் `கமிஷன்’ என்ற பெயரில் பெருமளவில் கொள்ளையடிக்கின்றன என்பதே ஒட்டுநர்கள் சார்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதற்குத் தீர்வாக கேரளாவில் அரசு சார்பாக 'சவாரி ஆப்' உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் தமிழகத்திலும் அரசு சார்பாகச் செயலி உருவாக்கப்படுமா என்னும் கேள்வி எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் ட்விட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், ``தமிழ்நாடு முழுவதுமுள்ள ஆட்டோ வாகன ஓட்டுநர்கள் எரிபொருள், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்குச் சரியான வருமானம் கிடைக்காமல் தவித்துவருகின்றனர். குறிப்பாக, ஆன்லைன் முன்பதிவு செயலி மூலம் வாடகைக்கு வாகனம் ஓட்டுவோரின் உழைப்பு தனியார் நிறுவனங்கள் வாயிலாக சுரண்டப்பட்டுவருகிறது. இப்படி பெரு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்தாமல், தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும், பெரு நிறுவனங்கள் செயலியைப் பயன்படுத்தினால் பெரும் தொகையை அவர்களே எடுத்துக்கொள்ளும் நிலை இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க ஓட்டுநர்கள், இந்தத் தொழிலைவிட்டே வெளியேறும் சூழல் ஏற்படும். இதைக் கருத்தில்கொண்டு, கேரளா அரசு கொண்டுவந்த குறைந்த தொகையில் முன்பதிவு வாகனச் செயலிகளை தமிழ்நாட்டிலும் அறிமுகம் செய்யும் முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
ஓட்டுநர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன?
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் பயன்பாட்டுக்குவந்த தனியார் வாகனச் செயலிகள், தொடக்கத்தில் ஓட்டுநருக்கு மாதம்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.6,500, சவாரிக் கட்டணம் ரூ.40-க்கு 30 ரூபாய் உயர்த்தி , மொத்தமாக 70 ரூபாய் வழங்கியது. பொதுமக்களைக் கவரும் வகையில் முதல் பயணம் இலவசம், சேவை வரி இல்லை என்றதும் பயணிகள் பலரும் ஆர்வத்துடன் இந்தச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்தனர். அப்போது, தமிழக அரசால் நிர்ணியக்கப்பட்ட கட்டணம் 1 கிலோமீட்டருக்கு ரூ.25-ம், கூடுதல் கிலோமீட்டருக்கு ரூ.12-ம் சேர்த்து வாங்கப்பட்டன.

அப்போது பெட்ரோல் விலை 60 என்ற நிலையில் இருந்தது, அது தற்போது 100-ஐ கடந்துவிட்டது. இருப்பினும், அதன் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், தனியார் செயலி மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலிருந்து மிகக் குறைந்த தொகைதான் ஓட்டுநர்களுக்குக் கிடைக்கிறது. பெரும் அளவிலான தொகையை கமிஷனாக நிறுவனமே எடுத்துக்கொள்கிறது. குறிப்பாக, பயனாளர்கள் கட்டணமாக செலுத்தும் தொகையிலிருந்து 30% நிறுவனம் பிடித்துக்கொள்கிறது. இதனால், அவர்கள் கைக்கு மிகக் குறைந்த அளவிலான பணம்தான் கிடைக்கிறது.
கேரளாவின் 'சவாரி ஆப்'!
வருமான சுரண்டல் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழவே, கேரள அரசு சார்பாக `சவாரி ஆப்’ என்னும் வாகன ஆன்லைன் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. "சேவை முதன்மை, நியாயமான கட்டணம் விதிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்" என்கிறது அரசு. தனியாரின் 20-30% சேவை வரிக்கு பதிலாக 8% மட்டுமே சேவை வரியாக விதிக்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்குச் சரியான தொகை கிடைக்கும். பயணிகளும் குறைந்த செலவில் பயணத்தை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, தனியார் நிறுவனங்களை பீக் ஹவர்ஸ் , பண்டிகை நாள்கள் மற்றும் நகரத்துக்கு வெளியில் செல்லும் பயணங்களுக்கு அதிக கட்டணம் செலுத்தவேண்டிய நிலையும் தடுக்கப்படும்.

இது தொடர்பாக இந்திய தொழிற்சங்க மையம் (CITU) மாநிலச் செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், ``கேரளாவைப்போல் தமிழக அரசும் வாகன ஆப் தொடங்கினால் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் வரும். போக்குவரத்துத் தேவை அதிகமுள்ள தமிழகத்தில் இந்தச் சேவையை அரசாங்கம் கொண்டுவருவது அவசியமானது.

மேலும், சேவை வரி இல்லாத, பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்தால் மக்களும், ஒரு பயணத்துக்கு ஓட்டுநர்களிடம் தனியார் பெறும் கமிஷன் ரூ.30-ஐ, ரூ.15-ஆகக் குறைத்தால் ஓட்டுநர்களும் இதைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள். அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்தால் கட்டமைப்பை உருவாக்கத் தேவைப்படும் நிதியை எங்கள் கூட்டமைப்பின் `வெல்ஃபேர் போர்டு’ தரத் தயாராக இருக்கிறது. எனவே, இதை அரசு செயலுக்குக் கொண்டுவந்தால் தனியாரால் நடக்கும் வருமானச் சுரண்டலை முற்றிலுமாகத் தடுக்க முடியும்" என்றார்.