குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் டீமேட் கணக்கில் ரூ.11,677 கோடி தவறாக வரவுவைக்கப்பட்ட சம்பவம் அவரை சில மணி நேரங்களுக்கு கோடீஸ்வரராக மாற்றிவிட்டது.
அகமதாபாத் பகுதியில் வசிக்கும் ரமேஷ் சாகர் என்பவரின் டீமேட் கணக்கில், ரூ.11,677 கோடி வரவு வைக்கப்பட்டிருப்பதாக திடீரென மெசேஜ் வந்திருக்கிறது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். ரமேஷ் சாகர் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்தாண்டு அவர் கோடக் செக்யூரிட்டிஸில் தனது டீமேட் கணக்கைத் தொடங்கினார். டீமேட் கணக்கு என்பது, பங்குச் சந்தையில் வணிகம் செய்யத் தேவையான ஒரு கணக்கு ஆகும்.

இந்த நிலையில், இது தொடர்பாக அவர், `` கடந்த ஜூலை 22-ம் தேதி என்னுடைய டீமேட் கணக்கில் ரூ.11,677 கோடி வரவு வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வந்தது. எட்டு மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பணம் என்னுடைய கணக்கில் இருந்தது. அதன் பிறகு டீமேட் கணக்கிலிருந்து அந்தத் தொகை டெபிட் செய்யப்பட்டது'' என்று தெரிவித்தார்.
தற்போதைய காலகட்டத்தில் வங்கிக் கணக்குகளில் பணம் மாறி வரவு வைக்கப்படுவது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தவறுதலாக வரவுவைக்கப்பட்ட 11,677 கோடி ரூபாயால் ரமேஷ் சாகர் எட்டு மணி நேரத்துக்கு பெரும்பணக்காரராக மாறினார்.