`மத்திய, மாநில மருந்தகங்களில் குறைந்த விலையில் மாத்திரைகள்... தரமாக இருக்குமா?' - அதிகாரி விளக்கம் #DoubtOfCommonMan
`மத்திய அரசின் 'ஜன் ஔஷதி' திட்டத்தில், குறைந்த விலையில் மாத்திரைகள் எப்படி சாத்தியப்படுகிறது?'

ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு முன்னெடுத்த முக்கியமான முயற்சி, `ஜன் ஔஷதி திட்டம்'. மற்ற விற்பனையகங்களில் 80 ரூபாய்க்குக் கிடைக்கும் மாத்திரைகள், இங்கு 8 ரூபாய்க்குக் கிடைக்கலாம் எனும் அளவுக்கு விலை வித்தியாசம் இருக்கும்.
இப்படி குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துகள் தரமானவையாக இருக்குமா என விகடனின் வாசகரான K. பாலமுருகன், விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் தனது சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குநர் டாக்டர் உமாநாத்திடம், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்துக் கேட்டோம்.
''மருந்துகள் அனைத்தும் மருந்தகங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, அடிப்படையான மூன்று நிலைப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அவை,

1) Verified Quality Test:
தயாரிக்கப்பட்டு, மருந்துக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து மருந்துகளுக்கும் இந்த தரப்பரிசோதனை மேற்கொள்ளப்படும். `Verified Quality Test' பரிசோதனையில் சான்றிதழ் கிடைக்கப்பெறும் மருந்துகள், அரசு மருத்துவ சேவைகள் இருக்கும் இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
2) NABL Test:

Verified Quality Test-ல் சான்றிதழ் பெறப்பட்ட மருந்துகளிலிருந்து, அரசு சார்பில் `மாதிரி' மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை `சோதனை மற்றும் அளவு திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்துக்கு (National Accreditation Board for Testing & Calibration Laboratories)' பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படும். இங்கு, தேர்ச்சிபெற்று சான்றிதழ் பெறும் மருந்துகள், மருந்தகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
3) மருந்தகங்களில் உள்ள மருந்துகளை, மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநர் நேரடியாகச் சென்று பரிசோதிப்பார். இந்தச் சோதனை, அனைத்து அரசு மருந்தகங்களிலும் கட்டாயம் செய்யப்படும். தனியார் மருந்தகங்களில் இன்ஸ்பெக்ஷனாக நடைபெறும்.

இந்த மூன்று நிலைகளில் எதிலாவது மருந்து தரமில்லை எனத் தெரியவந்தால், அந்த மருந்தைத் தயாரித்த நிறுவனம் தடைசெய்யப்படும். அந்த தயாரிப்பு நிறுவனம், மேலும் மருந்துகளைத் தயாரிக்காமல் முடக்கிவைக்கப்படும். ஒருமுறை ஒரு மருந்தகத்தை முடக்கிவிட்டால், அதன்பின் மூன்று வருடங்களுக்கு அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மருந்துகள் விற்பனை செய்யப்பட முடியாது.
அரசின் இத்தனைகட்ட தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகள், நிச்சயம் தரமானவையாகவே இருக்கும். ஒருவேளை, ஏதேனும் மருந்து பாதிப்படைந்திருப்பது தெரியவந்தால், மக்கள் எங்களிடம் (மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தில்) புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் டாக்டர் உமாநாத்.
`மத்திய, மாநில மருந்தகங்களில், குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படுவது எப்படி சாத்தியம்?'
"மருந்தில் மூன்று வகை இருக்கின்றன.
* பிராண்டட் மருந்துகள்
* ஜெனரிக் மருந்துகள்
* பிராண்டட் ஜெனரிக் மருந்துகள்
இதில் மத்திய, மாநில அரசு மருத்துவமனைகள் இரண்டிலும் ஜெனரிக் வகை மருந்துகள் மட்டுமே பெறப்படும். அவை, விலை குறைந்திருப்பது இயல்பு.
ஏன் அப்படி?

எந்தவொரு மருந்து புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட காலத்துக்கு அதற்கு காப்புரிமைக் (Patent) காலம் இருக்கும். அந்தக் காலம் முடிந்தபிறகு, அந்த மருந்தை அதே மூலக்கூறுகளைக் கொண்டு வேறு யார் வேண்டுமானாலும் தயாரித்து விற்கலாம். அப்படி காப்புரிமைக் காலம் முடிந்து, பல நிறுவனங்கள் ஒரே மூலக்கூறுள்ள மருந்தைத் தயாரித்து விற்கத் தொடங்கும்போது, மருந்தின் விலை குறையத் தொங்கும். இப்படி காப்புரிமைக் காலம் முடிவுற்ற பிறகு, பிராண்டு பெயரின்றி, மூலக்கூறுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் மருந்துகளே, ஜெனரிக் வகை மருந்துகள்.
இப்படி கிடைக்கப்பெறும் மருந்துகள், விலை குறைவாக இருப்பதாலேயே தரமாக இருக்காது என்று நினைப்பது அறியாமை. காரணம், எந்தவொரு மருந்துக்கும் அதன் மூலக்கூறுதான் பிரதானம். மூலக்கூறு சரியாக இருந்தால், அதில் நிச்சயம் பிரச்னை இருக்காது. மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ள மூலக்கூறுகள் சரிதானா என்பதைச் சரிபார்க்கும் பணிகள் யாவும், மேற்சொன்ன வரிசையில், அரசு சார்பில் செய்யப்படும்" என்றார்.
'ஜன் ஔஷதி' மருந்தகங்களை நிர்வகிக்கும் அதிகாரி ஒருவர் பேசும்போது, ''2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய அரசின் இந்த குறைந்த விலை மருந்தகங்கள், 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், `பிரதான் மந்திரி ஜன் ஔஷதி யோஜனா (PMJAY)' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், `பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா (PMBJP)' எனப் பெயர் மாற்றப்பட்டது. இந்தக் குறைந்த விலை மருந்துக் கடைகளுக்கு உரிமம் வழங்குவது, மத்திய உரத்துறை மற்றும் ரசாயன அமைச்சகத்தின் சார்பில் செயல்படும் `பீரோ ஆஃப் ஃபார்மா’ என்ற அமைப்பு.

ஜன் ஔஷதி மருந்தகங்களில் விற்பனைக்கு வரும் அனைத்து மருந்துகளுமே GMP (Good Manufacturing Practice), சோதனை மற்றும் அளவு திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (Random NABL - National Accreditation Board for Testing & Calibration Laboratories) ஆகியவற்றிலிருந்து அங்கீகார சான்றிதழ்களைப் பெற்றவையே என்பதால், சந்தேகமோ அச்சமோ தேவையில்லை.
எங்களின் மாத்திரை, மருந்துகள் அனைத்திலும் BPPI - PMBJP லோகோ பிரின்ட் செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை, எங்கள் மருந்தகங்களில் அந்த லோகா இல்லாமல் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கப்பெற்றால், அவற்றை மக்கள் வாங்க வேண்டாம். அவை நம்பகத்தன்மை வாய்ந்தவை அல்ல. இந்த விழிப்புணர்வோடு மக்கள் செயல்பட வேண்டுகிறோம்.'ஜன் ஔஷதி' மருந்தகங்களை நிர்வகிக்கும் அதிகாரி.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவுசெய்யுங்க!
