தமிழ்நாடு மூலிகை தாவர வாரியம் சார்பில் அஸ்வகந்தா பயிர் சாகுபடி குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி மையம் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``முதல்வர் அறிவித்த 136 அறிவிப்புகள் தொடர்ச்சியாக ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 136 அறிவிப்புகளில் இந்திய மருத்துவத்துக்கு மட்டும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா, ஹோமியோபதி என ஒன்பது அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதுவரை 6 அறிவிப்புகள் இந்த துறையின் சார்பில் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இரண்டு அறிவிப்புகள் இங்கே நடைமுறைக்கு வர தொடங்கியிருக்கின்றன. இன்னும் மூலிகை பொருள்களின் மூலம் அழகு சாதன பொருள்கள் தயாரிக்கிற அந்த அறிவிப்பு மட்டும்தான் தொடங்கப்படாமல் உள்ளது. அந்தப் பணிகளுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் அஸ்வகந்தா என்று சொல்லப்படுகிற ஒரு சித்த மருத்துவத்திற்குரிய மூலிகைச்செடி 200 ஏக்கரில் வளர்க்கப்படுகிறது. இந்த பயிர்கள் வளர்ந்து இது பெரிய பலன் கிடைக்கும். இந்த அஸ்வகந்தா மூலிகை செடி ஆந்திரா, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டும்தான் பயிரிடப்படுகிறது. இதைப் பயன்படுத்தி லேகியம், டானிக் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் பயிரிடுவதன் மூலம் நமக்கு பெரிய அளவில் சித்த மருத்துவத்திற்கு ஒரு உயிர்ப்பான நிலை தமிழகத்திலே உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. திண்டுக்கல் பகுதிகளில் தொடங்கப்படவிருக்கிற இந்த பயிர் திட்டத்தின் மூலம் நிச்சயம் ஒரு மிகப்பெரிய அளவிலான வர்த்தகமும் விவசாய பெருமக்களுக்கு நன்மையும் கிடைக்கும். மூலிகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் சமூகத்திற்கு மிகப்பெரிய அளவில் நன்மை பயக்கும்.

சித்த மருத்துவத்திற்கு இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய அளவிலான ஒரு சிறப்பு அங்கீகாரம் தமிழகத்திலே இருந்து கொண்டிருக்கிறது. ஒன்றிய அமைச்சரிடம் தமிழகத்தில் 100 இடங்களில் இந்த சித்த மருத்துவத்திற்கான நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைப்பதற்கான அந்த ஒப்புதல் தர வேண்டும் எனக் கோரியிருந்தோம். தற்போது 100 இடங்களில் அந்த சித்த மருத்துவ நலவாழ்வு மையங்களை அமைப்பதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தந்து அதற்காக 12 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் இந்து சமய அறநிலைய துறை, மக்கள் நல்வாழ்வு துறை இணைந்து சுமார் 38 ஏக்கரில் பழனியில் ஒரு சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கவிருக்கின்றன. அடிப்படை வசதியுடன் 50 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை விரைவில் பழனியில் திறக்கப்படசிருக்கிறது" என்றார்.
முன்னதாக திண்டுக்கல் மாவட்ட தலைமை மருந்து குடோன், அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``தமிழகம் முழுவதும் எந்த மருந்து தட்டுப்பாடும் இல்லை. தமிழகத்தில் 32 இடங்களில் உள்ள தலைமை மருந்து கிடங்குகளில் எந்தெந்த மருந்துகள் எவ்வளவு நாள்களுக்கு இருப்பு உள்ளது என்பதை தகவல் பலகை மூலம் அறிவிப்பாக வெளியிடப்படும். இன்னும் 10 நாள்களுக்குள் அனைத்து மருத்துவக் கிடங்குகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்படும். தமிழகத்தில் மேலும் 5 மாவட்டங்களில் மருந்து கிடங்குகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ``அதற்காக அமைக்கப்பட்ட குழு விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறது. அறிக்கை வந்ததும் அது பற்றி கூறுகிறோம்" என்றார்.