
படத்தின் டீஸரில் டி காப்ரியோவும் ஜெனிஃபர் லாரன்ஸும் பூமிக்கு வருகைதரும் காட்சியை மட்டும் காட்டி பல்ஸ் ஏற்றியிருக்கிறார்கள்.
இந்த 2021-ல் இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக 70 ஒரிஜினல் படங்களை நேரடியாக ரிலீஸ் செய்யவிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். இவற்றில் அதிக எதிர்பார்ப்பில் இருப்பது லியானார்டோ டி காப்ரியோ நடிப்பில் உருவாகிவரும் ‘டோன்ட் லுக் அப்’ (Don’t Look Up). படத்தின் பிரமாண்ட பட்ஜெட்டைத் தாண்டி அதன் நட்சத்திரப் பட்டாளம்தான் ‘அவெஞ்சர்ஸ்...

அசெம்பிள்’ கணக்காக பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஜெனிஃபர் லாரன்ஸ், கேட் பிளான்சட், மெரில் ஸ்ட்ரீப், ராப் மார்கன், பாடகர் அரியானா க்ராண்டே, மேத்திவ் பெர்ரி, க்ரிஸ் ஈவண்ஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதையெல்லாம் தாண்டி பலரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர், ‘ஹாலிவுட்டின் அடுத்த டி காப்ரியோ’ என வர்ணிக்கப்படும் டிமோத்தி சாலமெட். இரண்டு விண்வெளி வீரர்கள் பூமியை நோக்கி வரும் ஒரு விண்கல் குறித்து மக்களை எச்சரிக்க வருவதுதான் படத்தின் ஒன்லைன். படத்தின் டீஸரில் டி காப்ரியோவும் ஜெனிஃபர் லாரன்ஸும் பூமிக்கு வருகைதரும் காட்சியை மட்டும் காட்டி பல்ஸ் ஏற்றியிருக்கிறார்கள். ஆரம்பிக்கலாங்களா?!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்ற பின்பும் தொடர்ந்து தோல்வியை ஏற்க மறுத்து வந்தார் டொனால்டு ட்ரம்ப். இதன் விளைவாக அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் கலவரங்களில் ஈடுபட்டது உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. ட்ரம்ப் ஆதரவாளர்கள் பல வழிகளிலும் இன்னமும் போராடி வருகின்றனர். அப்படி ஆதரவை வெளிப்படுத்துகிறேன் என ஒருவர் புளோரிடா மாகாணத்தில் கடற்பசு ஒன்றின் மீது ட்ரம்ப்பின் பெயரைப் பொறித்திருப்பது அங்கு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்துவருகின்றனர். வனத்துறையும் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. ‘இதைச் செய்தவர் யார் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்பவருக்கு 20,000 டாலர் சன்மானம் அளிப்பேன்’ என அறிவித்துள்ளார் பிரபல WWE வீரரும் நடிகருமான டேவ் படிஸ்டா. பசுவை வெச்சு அரசியல் பண்றதை விட மாட்டீங்களா?

தனுஷைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் தொடர்ச்சியாகப் படங்கள் கமிட்டாகிவருகிறாராம் விஜய் சேதுபதி. ‘மாநகரம்’ படத்தின் இந்திப் பதிப்பில் முனிஷ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. அடுத்ததாக ‘அந்தாதுன்’ இயக்குநர் படத்தில் கேத்ரீனா கைஃபுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். அதேபோல், சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார்களாம். அதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அவரே நடிப்பார் என்கிறார்கள். சூப்பர் ஜி சூப்பர் ஜி!
உலகமே வாட்ஸ்அப் செயலிக்கு மாற்று தேடிய நேரத்தில், ‘சிக்னலைப் பயன்படுத்துங்கள்’ என்றார், உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க். நிறைய பேர் ‘சிக்னல் ஆப்’பைத் தேடி ஓடினார்கள். ஒரு கோஷ்டி இன்னொரு விஷயத்தைச் செய்தது. ‘சிக்னல் அட்வான்ஸ்’ என்று ஒரு சிறிய நிறுவனம். மருந்துப் பொருள்களை விற்கும் இந்த நிறுவனத்தில், அதன் நிர்வாகி தவிர முழுநேர ஊழியர்கள் யாருமில்லை. இந்த நிறுவனத்தின் பங்குகளை பலர் வெறித்தனமாக வாங்கிக் குவித்தனர். இதனால், இரண்டே நாள்களில் இதன் சொத்து மதிப்பு 12 மடங்கு உயர்ந்தது. சிக்னல் ஆப் நிறுவனம் இதை உணர்ந்து, ‘நாங்கள் பங்குச்சந்தையில் இல்லை. நாங்கள் பெறும் ஒரே முதலீடு, உங்கள் பிரைவசியை மதிப்பதுதான்’ என டச்சிங்காக விளக்கம் கொடுத்திருக்கிறது.
உலகின் மாபெரும் தடுப்பூசித் திட்டமாகக் கருதப்படும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கிவிட்டது. இந்நிலையில், அதன் விலை குறித்துக் கேள்வி எழுந்துள்ளது. ஆக்ஸ்போர்டு உருவாக்கமான கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட்டில்தான் தயாராகிறது. ஐரோப்பிய யூனியன் இதை ஒரு டோஸ் 159 ரூபாய் என்ற விலையில் வாங்குகிறது. ஆனால், நம் அரசுக்கு 200 ரூபாய்க்குத் தருகிறார்கள். வெளி மார்க்கெட் விலையோ ஆயிரம் ரூபாய். ‘‘அரசு முறையாகப் பேசியிருந்தால் இன்னும் விலையைக் குறைத்திருக்கலாம். அதேபோல, இன்னும் பரிசோதனை முடிவுகளை முழுமையாக வெளியிடாத பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசியை 295 ரூபாய்க்கு அரசு வாங்குகிறது. இதையும் குறைந்தவிலைக்கு வாங்க இந்தியாவுக்கு முழு உரிமையும் உண்டு’’ என்கிறார்கள் மருத்துவச் செயல்பாட்டாளர்கள். ஆனால், ‘‘கொரோனா வந்து மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கு ஆகும் செலவுடன் ஒப்பிடும்போது தடுப்பூசி விலை மிக மிகக் குறைவு’’ என நியாயம் கற்பிக்கிறார், சீரம் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் ஆதர் பூனாவாலா.
சத்தமில்லாமல் ஒரு சம்பவம் நடந்து முடிந்திருக்கிறது. ‘அமெரிக்காவில் அதிக விவசாய நிலங்களை வாங்கி வைத்திருக்கும் பெரும் பணக்காரர்’ ஆகியிருக்கிறார் பில் கேட்ஸ். ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்திலிருந்து ஒதுங்கி தன் அறக்கட்டளைப் பணிகளை பில் கேட்ஸ் செய்துவர, அவரின் கேஸ்கேட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் 2,68,981 ஏக்கர் நிலத்தை வாங்கிக் குவித்திருக்கிறது. ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய நாடுகளில் சிறு விவசாயிகள் மற்றும் விவசாயத்தை நம்பியிருக்கும் பெண்களுக்காக பில் கேட்ஸ் அறக்கட்டளை பணி செய்துவருகிறது. அவர்களுக்கு லாபம் தரும் தொழிலாக விவசாயத்தை மாற்றுவதற்கு, இந்த அமெரிக்க நிலங்களில் ஆராய்ச்சி நடக்குமாம்!
2020-ம் ஆண்டின் பெரும் பகுதியை கொரோனா காரணமாக பலரும் வீடுகளிலேயே செலவழித்தனர். மனித நடமாட்டம் இல்லாததால், இயற்கை மீண்டும் தன் இடத்தை அடைய முயன்றிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், ‘எதுவும் மாறவில்லை’ என்று தெரிவிக்கிறது நாசாவின் சமீபத்திய அறிக்கை. இதுவரை பதிவானதில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2016-ம் ஆண்டுடன் சமன் செய்திருக்கிறது 2020. 2016-ல் எல் நினோ நிகழ்வால் உலக வெப்பம் அதிகமாக இருந்தது. கடந்த வருடம் அப்படிக் குறிப்பிடும்படி எந்த இயற்கை நிகழ்வுமே இல்லை. இருந்தும் உலகின் வெப்பம் உச்சம் தொட்டிருக்கிறது. முன்பெல்லாம் 11-12 வருடங்களுக்கு ஒரு முறைதான் பூமி அதன் உச்ச வெப்பநிலையைத் தொடும். இப்போது 3-4 வருடங்களுக்கு ஒருமுறை தொடுகிறது. ‘காலநிலை மாற்றத்திற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது’ என்கிறது நாசா. ரத்த பூமி.. வெப்ப பூமி!

பறவைக் காய்ச்சல் பீதியில் கோழிகளும் வாத்துகளும் கொல்லப்படும் சூழலில் ஒரு புறா உலக வைரல் ஆகியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் விலங்குகளை இறக்குமதி செய்ய எப்போதுமே கெடுபிடிகள் அதிகம். அதுவும் இது கொரோனா காலம் என்பதால், ஒவ்வொரு பறவையையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்குப் புதிதாக ஒரு புறா அமெரிக்காவிலிருந்து பறந்து வந்ததாக சர்ச்சை கிளம்ப, அதைக் கொல்ல முடிவு செய்தது ஆஸ்திரேலியா. ஆனால், ‘இது வெறும் புரளி. அது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறவைதான்’ என்பது உறுதியானது. அதனால் புறா கடைசி நிமிடத்தில் காப்பாற்றப்பட்டது. இந்த மனுஷங்களுக்கு மத்தில வாழ்றது இருக்கே...

ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக ஏதேனும் ஒரு வெளிநாட்டு அதிபர் அல்லது பிரதமர் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கொரோனாவைக் காரணம் காட்டி அவர் பயணத்தை ரத்து செய்துவிட்டார். இந்நிலையில், அவருக்குப் பதிலாக வேறு யாரையும் அழைப்பதில்லை என மத்திய அரசு தீர்மானித்துள்ளது. கடைசியாக 1966-ம் ஆண்டு பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி திடீரென மறைந்து, இந்திரா காந்தி பதவியேற்க நேர்ந்த தாமதத்தால் யாரையும் அழைக்காமல் விட்டார்கள். 55 ஆண்டுகளுக்குப் பிறகு விருந்தினர் இல்லாமல் மீண்டும் ஒரு குடியரசு தினம்!

இந்தியாவின் முதல் சுதேசி மெஷின் பிஸ்டலாக உருவாகியிருக்கிறது, ‘அஸ்மி’. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து இதை உருவாக்கியிருப்பவர், லெப்டினென்ட் கர்னல் பிரசாத் பன்சோத். எடை குறைவான அலுமினியத்தைப் பயன்படுத்தி 3டி பிரின்டர் மூலம் இதைச் செய்துள்ளார் பிரசாத். வெறும் இரண்டு கிலோ எடையுள்ள இது, 100 மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாகச் சுடும். புல்லட்களை தானே லோட் செய்துகொள்ளும் வசதியுள்ள இந்த மெஷின் பிஸ்டலை ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு ஆயுதமாகப் பயன்படுத்த முடியும். ‘‘வெறும் 50 ஆயிரம் ரூபாயில் இதை உருவாக்க முடியும் என்பதால், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்’’ என்கிறது இந்திய ராணுவம். ‘அஸ்மி’ என்றால் பெருமை என்று அர்த்தமாம். இது இந்தியாவின் பெருமை.