
நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் ‘ACT OF GOD’ விமர்சனம்தான் இரண்டு வாரமாக டிரெண்டிங்கில் இருக்கிறது
* கணவர் மற்றும் மகன் குறித்து மீடியாவில் பேச விரும்பாதவர், `செம்பருத்தி’ சீரியலின் வில்லி ‘ஊர்வம்பு’ லக்ஷ்மி. ஒருவழியாக மகனை மட்டும் இப்போது வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ஷோ ஒன்றில் விஷுவல் மீடியா படித்திருக்கும் மகனுடன் கலந்து கொண்டார். மகனைக் காட்டியாச்சு சரி... கணவரை? `அவரையும் கூட்டிட்டு வரலாம்ல’ எனக் கேட்டால், `அவருக்கு இதெல்லாம் பிடிக்காது’ என்கிறார். லக்ஷ்மியின் கணவர் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர் என்பதே ஹைலைட். அவர், ‘நீங்கள் கேட்ட பாடல்’ விஜய்சாரதி. இன்று ஒரு தகவல்
* நாயகன், சர்கார் (இந்தி), தலைவா என இந்திய டான் திரைப்படங்களின் ஆதிமூலம் காட்பாதர்தான். காட்பாதர் படத்தின் மூன்றாம் பாகம் 1990-ம் ஆண்டு வெளியானது. தற்போது படத்துக்காக எடுக்கப்பட்டு பயன்படுத்தாமல் இருக்கும் சில காட்சிகளை வைத்து, புதிய தொடக்கம் முடிவு எனப் பல விஷயங்களை மாற்றி, படத்தை மீண்டும் வெளியிடவிருக்கிறார் அதன் இயக்குநர் பிரான்சிஸ் போர்டு கொப்போலா. வரும் டிசம்பர் மாதம், இணையத்திலும், டிவிடியிலும் இந்தப் புதிய பதிப்பு வெளியாகவிருக்கிறதாம் . இந்தப் புதிய படம்தான் முழுமையானதாகவும் மனதுக்கு நெருக்கமானதாகவும் இருக்கும் என்கிறார் கொப்போலா. எப்படியெல்லாம் காசு பார்க்கறாங்க?

* நாகசைதன்யா நடிக்கும் ‘தேங்க் யூ’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார், பிரியா பவானி ஷங்கர். நாகசைதன்யாவுடன் நடிக்கும் படம் வொர்க்கவுட்டானால், அடுத்தடுத்து சமந்தாவைப் போல டோலிவுட்டிலும் பிஸியாகிவிடுவார் பிரியா. சமந்தாவுக்கும் இவருக்குமான ஒற்றுமை... இருவருமே பல்லாவரத்தைச் சேர்ந்தவர்கள். அக்கடச்சூடு!
* ஐபிஎல் விளையாட உலக அணிகள் ஒரு பக்கம் ஆயத்தமாகிவர, இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் ஒரு நாள், டி20 என விளையாடிவருகின்றன. ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளின் மோதல் என்றாலே, திட்டுதல், சீண்டுதல் என வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை எல்லோரும் கோதாவில் இறங்குவார்கள். ஆனால், இந்தக் கொரோனாச் சூழலில் எல்லாம் அடியோடு மாறிவிட்டது. பார்வையாளர்களே இல்லாமல் விளையாடுவதைக் குறிப்பிட்ட ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், “முதல்முறையாக இங்கிலாந்தில் எந்த கேலி கிண்டலுக்கும் ஆளாகாமல் விளையாடிவருகிறேன். இதுவும் நல்லா இருக்கு’’ என்றார். எவ்ளோ கஷ்டத்துல இருந்தா இப்படிச் சொல்லியிருப்பார்!
* நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் ‘ACT OF GOD’ விமர்சனம்தான் இரண்டு வாரமாக டிரெண்டிங்கில் இருக்கிறது. ‘எல்லாத்தையும் நீங்க பண்ணிட்டு கடவுள் மேல பழிய போடாதீங்க’ என ஒருசேர கண்டனக்குரல் எழுந்துவருகிறது. மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளாததுதான் இந்தியாவின் தற்போதைய வீழ்ச்சிக்குக் காரணமெனக் குற்றம் சாட்டியிருக்கிறார் நிர்மலா சீத்தாராமனின் கணவரான பரகலா பிரபாகர். இதுகுறித்து, தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே எச்சரித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். எங்கங்க கேட்கறாங்க.
* தமிழக அரசு ஷூட்டிங் நடத்த அனுமதி அளித்திருந்தாலும் பெரிய ஹீரோக்கள் யாரும் ஷூட்டிங் செல்லத் தயாராக இல்லையாம். ‘அண்ணாத்த’ படம் முடித்த பின்னர்தான் ராஜ்கமல் நிறுவனத்துக்கான படத்தைத் தொடங்குவதாக ரஜினி தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். படம் ஒருவேளை தள்ளிப்போனால், கமலுக்கான அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்கிறார்கள். அதே சமயம், கமலின் ராஜ்கமல் நிறுவனம் ஓ.டி.டியில் அதிக கவனம் செலுத்தவிருக்கிறது. அதற்காகக் கதைகள் கேட்டு வருகிறார்களாம். கதை கேளு! கதை கேளு!!

* தடகள வீராங்கனையாக நினைக்கும் கிராமத்துப் பெண்ணின் கதைதான் ‘ராஷ்மி ராக்கெட்’. நந்தா பெரியசாமி எழுதிய இந்தக் கதையை பாலிவுட்டில் டாப்ஸியை வைத்து இயக்குகிறார், ஆகார்ஷ் குரானா. ஏற்கெனவே இந்தப் படத்திற்கான பாதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஆனால், அதற்குள் இதன் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமைகள் விற்கப்பட்டுவிட்டன என்கிறார்கள். இந்தப் படம் தவிர, `சபாஷ் மித்து’, `ஹசீன் தில்ரூபா’, ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’, விஜய் சேதுபதியுடன் ஒரு படம் என ஏராளமான படங்கள் டாப்ஸியின் வசமுள்ளன. கேம் கன்டினியூ!

* கான், மன்னவன் வந்தானடி என செல்வராகவனின் போஸ்டர் மட்டுமே வெளியான படங்கள் தூசி தட்டப்படுகின்றன. செல்வராகவன் நாயகனாக நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் அதே நிறுவனம்தான் இந்தப் படங்களையும் தயாரிக்கின்றன என்பதால், அதன் வேலைகளில் செல்வராகவன் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். அந்தப் படங்களுக்காகத்தான் உதவி இயக்குநர்கள் தேவையென சமூக வலைதளங்களில் அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். அப்படியே அந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’யும்...