தமிழகத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கிளைமேட் டிரண்ட்ஸ் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி செல்வதால் காற்று மாசு குறையுமா ? என்ற கேள்வியும் எழுகிறது.

கிளைமேட் ட்ரண்ட்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பதிவு செய்யப்படும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2018 -ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மின்சார இரு சக்கர வாகனங்களில் எண்ணிக்கை மட்டும் 1328 ஆக உள்ளது. 2019ல் 3444 இரு சக்கர வாகனங்களும், 2020 -ல் 5698 இருசக்கர வாகனங்களும், 2021-ல் 30,034 இருசக்கர வாகனங்களும், 2022 ( அக்டோபர் வரை) 49,466 இருசக்கர வாகனங்களும் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த மின்சார வாகனங்களில் எண்ணிக்கை 1,00,121 ஆக உள்ளது. தமிழகத்தில் பதிவு செய்யப்படும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பும், அரசு சார்பாக மின்சார வாகனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளும் காரணமாக உள்ளது என கூறுகின்றனர்.

இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக, தமிழகம் மின்சார வாகனங்களுக்கு இரண்டு வருட காலம் 100% சாலை வரியை தள்ளுபடி செய்துள்ளது. மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சலுகையை அரசு அறிவித்துள்ளது. ஓலா போன்ற பெரும் நிறுவனங்கள் மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் மும்மூரம் காட்டி வருகின்றன. இந்திய நிறுவனமான டாடா, மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரித்து, விற்பனைக்கு வைத்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், 'பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனம், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 300 கிராம் கார்பனை வெளியேற்றுகிறது. ஆனால் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனம் ஒரு கிலோமீட்டருக்கு எந்த ஒரு கார்பன் துகள்களையும் வெளியிடுவதில்லை.

தற்பொழுது தமிழகத்தில் இயக்கத்தில் இருக்கும் 1,00,121 மின்சார வாகனங்களால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 30,0006 கிலோகிராம் கார்பன் வெளியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் 2030-க்குள், 3.6 கோடி டன் கார்பன் வெளியேற்றத்தை தடுக்கலாம். மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள், எரிபொருளுக்கான செலவையும் மிச்சப்படுத்தும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைக்கு மனிதகுலத்திற்கே மிகப்பெரிய ஆபத்தாக பார்க்கப்படுவது புவி வெப்பமயமாகுதல் மற்றும் பருவநிலை மாற்றம் தான். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகளின் பிரதிநிதிகள் இணைந்து அவ்வப்போது ஆலோசித்தும் வருகின்றனர். காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாகுதலை தடுக்க கார்பன் போன்ற ஆபத்தான வாயுக்கள் வெளியேற்றத்தை குறைப்பதுதான் ஒரே வழியாகும். அதனை நோக்கிய பயணத்தில் மின்சார வாகனங்கள் வரும் காலங்களில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.