
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில், தான் மீண்டும் போட்டியிடப்போவதை உறுதிசெய்திருக்கிறார் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

போர்க் குற்றவாளியா ஜெலன்ஸ்கி?
ரஷ்யா வசமிருந்த கெர்சன் பகுதியைச் சென்ற வாரம் மீட்டெடுத்தது உக்ரைன் படை. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இந்த நிலையில் நவம்பர் 16 அன்று, உக்ரைன் எல்லையிலுள்ள போலந்து நாட்டின் Przewodow கிராமத்தில் ஏவுகணை ஒன்று விழுந்ததில், அந்த நாட்டைச் சேர்ந்த இருவர் பலியாகினர். முதற்கட்ட விசாரணையில், `அது ரஷ்யாவின் ஏவுகணையாக இருக்கலாம்’ என்று தகவல் வெளியாக, ``ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் எல்லையற்றவை. நேட்டோ அமைப்பிலுள்ள போலந்தில் தாக்குதல் நடத்தியிருப்பது கூட்டுப் பாதுகாப்புக்கு எதிரானது’’ எனக் கொந்தளித்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. ஆனால், `அது உக்ரைன் பயன்படுத்திய வான் பாதுகாப்பு ஏவுகணை’ என்று சொல்லிவிட்டது அமெரிக்கா. இதனால், உக்ரைன் அதிபர் ரஷ்யாமீது வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர் பக்கமே திரும்ப, #ZelenskyWarCriminal என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.

சீன அதிபர் Vs கனடா பிரதமர்!
நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தனியாகச் சந்தித்துப் பேசினர். அப்போது ட்ரூடோ, `கனடா தேர்தலில் சீனா ஊடுருவி உளவு பார்க்கிறது, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது’ என ஜின்பிங்கிடம் புகாரளித்ததாகச் செய்திகள் வெளியாகின. தனியறைக்குள் பேசிய செய்திகள் கசிந்ததால் கடுப்பான ஜின்பிங், நேரடியாக ட்ரூடோவைச் சந்தித்து முகத்துக்கு நேராகக் குற்றம்சாட்டும் வீடியோ இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில், ``நாம் விவாதித்த எல்லாம் செய்தித்தாள்களுக்குக் கசியவிடப்பட்டிருக்கின்றன. இது முறையற்ற செயல்’’ என்கிறார் ஜின்பிங். அதற்கு, ``சுதந்திரமான, வெளிப்படையான உரையாடல்கள்மீது கனடா நம்பிக்கை கொண்டிருக்கிறது. தொடர்ந்து நாங்கள் அதைச் செய்வோம். ஆக்கபூர்வமாக நாம் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புகளை ஆராய்வோம்’’ என்று ட்ரூடோ பேசிக் கொண்டிருக்கும்போதே, ``அதற்கான சூழலை உருவாக்குங்கள்’’ என்று சொல்லி அவருடன் கைகுலுக்கிவிட்டு நகர்கிறார் ஜின்பிங். இரு நாட்டுத் தலைவர்களும் நேருக்கு நேர் முறைத்துக்கொள்வது அரிய நிகழ்வு என்பதால், இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

மீண்டும் ட்ரம்ப்!
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில், தான் மீண்டும் போட்டியிடப்போவதை உறுதிசெய்திருக்கிறார் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதற்காக, வேட்பாளருக்குத் தேவையான ஆவணங்களை நவம்பர் 16-ம் தேதி அன்று அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறார் ட்ரம்ப். இதையடுத்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், ``அமெரிக்காவுக்கான மறு பிரவேசம் இப்போதே தொடங்கிவிட்டது. மீண்டும் அமெரிக்காவை மகத்தான நாடாக மாற்றுவேன்’’ என்றார். சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கான இடைக்காலத் தேர்தலில், ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றிருப்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.