
இரான் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம், `ஹிஜாப் சரியாக அணியவில்லை’ என்று `கலாசார காவல்படை’-யால் தாக்கப்பட்ட மாஷா அமினி என்ற பெண் உயிரிழந்தார்.

பள்ளித் தேர்வெழுதிய எம்.பி-க்கள்!
`மாணவர்களுக்குத் தேவையில்லாமல் தேர்வுகளைவைத்து கஷ்டம் கொடுக்கிறார்கள். சில தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும்’ என்று பிரிட்டன் நாட்டின் பள்ளிக்கல்வித்துறைக்கு, தொடர் புகார்கள் வந்துகொண்டிருந்தன. இதை யடுத்து, நாடாளுமன்ற கல்விக்குழு தலைவரான ராபின் வால்கர் உட்பட பிரிட்டனின் 13 எம்.பி-க்கள் பள்ளித் தேர்வெழுத முடிவெடுத்தனர். அதன்படி, 6-ம் வகுப்பு மாணவர்களின் திறனைச் சோதிக்கும் சாட் (SAT) தேர்வை எம்.பி-க்கள் எழுத, தேர்வு கண்காணிப்பாளர்களாக மாணவர்கள் செயல்பட்டனர். கணிதம் சார்ந்த இந்தத் தேர்வில், கடந்த முறை 59 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க, எம்.பி-க்களோ 44 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றிருக்கின்றனர். ஆனாலும் இந்தத் தேர்வுகளை ரத்துசெய்யும் முடிவை எம்.பி-க்கள் எடுக்கவில்லை. அதேநேரத்தில், `இந்தத் தேர்வுகளில் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது அவசியம்’ என்று பரிந்துரைத்திருக்கின்றனர்.

ஹிஜாப் போராட்டம்... தூக்குத் தண்டனை?!
இரான் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம், `ஹிஜாப் சரியாக அணியவில்லை’ என்று `கலாசார காவல்படை’-யால் தாக்கப்பட்ட மாஷா அமினி என்ற பெண் உயிரிழந்தார். இதையடுத்து, நாடு முழுவதும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன. இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்த போராட்டத்தின் முதற்கட்ட வெற்றியாக, `கலாசார காவல்படை’ பிரிவைக் கலைத்தது இரான் அரசு. அதேநேரத்தில், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட பலரையும் காவல்துறையினர் கைதுசெய்து துன்புறுத்துவதாகச் செய்திகள் வெளியாகின. அந்த வகையில், போராட்டத்தின்போது பாதுகாப்புப் படை வீரரைக் கத்தியால் குத்தியதாகச் சொல்லி மொக்ஷென் ஷெகாரி என்ற இளைஞரைத் தூக்கிலிட்டது அரசு. இதையடுத்து டிசம்பர் 12 அன்று, பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேரைக் கொன்றதாகக் கூறி மஜித்ரெஸா என்பவரைப் பொதுவெளியில் வைத்துத் தூக்கிலிட்டிருக்கிறது. இரானின் இந்தக் கொடூரச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது ஐ.நா சபை.`
இந்தப் போர் ரஷ்யா Vs நேட்டோவாக மாறும்!’
ரஷ்யா-உக்ரைன் போர் 10 மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கும் இந்தப் போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதேநேரத்தில், ரஷ்ய அதிபர் புதினோ, ``இந்தப் போர் முடிய இன்னும் சில காலம் ஆகும்’’ என்றிருக்கிறார். இந்த நிலையில், ``உக்ரைன் போர் மிகவும் அபாயகரமானது. இதில் சிறு தவறு நடந்தால்கூட, இது நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போராக மாறிவிடும். இந்தப் போர் ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதைத் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துவருகிறோம்’’ என்று கூறி, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் நேட்டோ கூட்டமைப்பின் தலைவர் ஜென்ஸ்.