அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி செப்டம்பர் 11, 2001 அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தற்கொலைத் தாக்குதல் நடத்த குழுவை ஒருங்கிணைத்தவர் எனக் கூறப்படுகிறது. மேலும், அக்டோபர் 12, 2000 அன்று ஏமனில் USS கோல் கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 17 அமெரிக்க மாலுமிகள் கொல்லப்பட்டனர். 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்களில் அய்மன் அல்-ஜவாஹிரியும் ஒருவர் எனவும் நம்பப்படுகிறது. இதற்கான பதிலடியாகத்தான் அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க அதிகாரிகள், ``ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்" எனத் தகவல் வெளியிட்டுள்ளனர்.

வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டது எப்படி உறுதிப்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. ஆகஸ்ட் 2021-ல் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர், ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை அந்நாட்டில் தனது ராணுவம் இல்லாவிட்டாலும் சமாளிக்க முடியும் என்ற அமெரிக்காவின் பலத்தை உறுதிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்குப் பின்பு தீவிரவாத அமைப்புக்கு இது மிகப்பெரிய பாதிப்பு என உலக நாடுகள் நம்புகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியின் மரணம் குறித்து, பலமுறை வதந்திகள் வந்துள்ளன. ஆனால் இந்த முறை, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்த ஆப்கானிஸ்தானுக்குள் ஆளில்லா விமானம் பறந்ததற்குக் கண்டனம் தெரிவித்து, `இது சர்வதேசக் கொள்கைகளை மீறுவதாக அமைந்திருக்கிறது’ எனக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.