அமெரிக்கப் பாதுகாப்பு விவகாரங்களைக் கண்காணிக்கும் பென்டகனில் முக்கியப் பதவிகளுக்கு ஐந்து பேரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்திருக்கிறார். இந்த நிலையில், பாதுகாப்புத்துறையில் நீண்ட அனுபவம்கொண்ட ராதா ஐயங்காரை பாதுகாப்புத்துறையின் உயர் பதவிக்கு அதிபர் பைடன் பரிந்துரைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, ராதா பாதுகாப்பு துணைச் செயலாளரின் தலைமை அதிகாரியாகப் பதவி வகித்துவருகிறார்.

ராதா ஐயங்கார் கூகுள், ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார். ஃபேஸ்புக்கில் கொள்கை பகுப்பாய்வின் உலகளாவிய தலைவராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். மேலும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் உதவிப் பேராசிரியராக இருந்தார். மேலும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். அவர் பாதுகாப்புத்துறை, எரிசக்தித்துறை மற்றும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் தேசிய பாதுகாப்புப் பிரச்னைகள் தொடர்பான பதவிகளை வகித்திருக்கிறார்.
