`இன்னொரு தியானன்மென் படுகொலையாக மாறக் கூடாது!’ - சீனாவை எச்சரித்த டிரம்ப்

இந்தப் போராட்டம் தியானன்மென் படுகொலை போன்ற மீண்டும் ஒரு சம்பவத்துக்கு வழிவகுக்கும் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்குக் கொண்டு சென்று விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவை நிரந்தரமாக நீக்கக்கோரி, ஹாங்காங்கில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் தியானன்மென் படுகொலை போன்ற மீண்டும் ஒரு சம்பவத்துக்கு வழிவகுக்கும் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

சீனாவில் கடந்த 1989-ம் ஆண்டு ஜனநாயக ஆட்சி கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சீனப் பொதுவுடைமைக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அரசியல் கொள்கைகளுக்கும் எதிராக, மாபெரும் போராட்டம் வெடித்தது. தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போதைய சீன அரசு இந்தப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது.
ஜூன் மாதம் 4-ம் தேதி தியானன்மென் சதுக்கத்தில் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். அதன் பின்னர் குருவியைச் சுடுவது போல் போராட்டக்காரர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்தினர். சீன ராணுவம் நிகழ்த்திய இந்தப் படுகொலையில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. தியானன்மென் சம்பவம் இன்றும் சீன மக்களின் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது.
ஹாங்காங் போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாகக் கடந்த வாரம் சீனாவின் அரசு நாளிதழில் தியானன்மென் சம்பவத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு, ``அதை மீண்டும் செய்யவைத்து விடாதீர்கள். சீனா அப்போது இருந்ததை விட பலமாகவும், முதிர்ச்சியுடனும் இருக்கிறது” எனச் செய்தி வெளியிட்டது. அத்துடன் ஹாங்காங்கின் எல்லைப் பகுதியில் சீனா ராணுவப் படைகளை குவித்து வருகிறது. சீனாவின் இந்தப் போக்கு உலகநாடுகளுக்கிடையே சலசலப்பையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஹாங்காங் போராட்டத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து, நியூஜெர்சி மாகாணத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ட்ரம்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ``சீனா வன்முறையைக் கையில் எடுத்தால், அதைப் பார்த்துக்கொண்டு அமெரிக்கா அமைதியாக இருக்காது. இருப்பினும், அவர்கள் அந்தச் செயலைச் சமாளிப்பது மிகவும் கடினம் என்றுதான் நினைக்கிறேன். அதாவது, அது மற்றொரு தியானன்மென் படுகொலையாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
சீனா அதைச் செய்ய முற்பட்டால் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர் இன்னும் வலுவடையும், பேச்சுவார்த்தை பாதிப்படையும். இந்தப் பிரச்னைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண விரும்புகிறேன். அத்துடன் அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபருக்கு அழைப்பு விடுக்கிறேன்" என்றார்.

கடந்த மூன்று நாள்களாக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் காஸ்வே பகுதியில் நேற்று நடந்த பேரணியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 17 லட்சம் பேர் கலந்து கொண்டனர். ஹாங்காங் தலைவர் கேரி லேம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அமைதியான முறையில் பேரணி நடத்தி வருவதாகவும், தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் எனவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.