பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகப் பதியப்பட்டுள்ள வழக்கை விசாரித்த பெஷாவர் உயர் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு ஜூன் 2 -ம் தேதி அன்று மூன்று வார இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``இம்ரான் கான் மக்களைத் தூண்டிவிடுபவர்; தார்மிக மற்றும் ஜனநாயக விழுமியங்களை முற்றிலும் புறக்கணித்து, தனது எதிர்க்கட்சியினரை துரோகிகள் என்று கூறும் ஒருவர் ஜனநாயகத்தில் எப்படி ஓர் அரசியல் கட்சியின் தலைவராக முடியும்... இம்ரான் கான் மீது கலவரம், தேசத்துரோகம், குழப்பம் மற்றும் கூட்டமைப்பு மீதான ஆயுதமேந்திய தாக்குதல்கள் உட்பட இரண்டு டஜன் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்காக, பெஷாவர் உயர் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு வழங்கிய பாதுகாப்பு ஜாமீன் காலாவதியானதுடன், அவரின் வீட்டின் வாயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளாலேயே கைதுசெய்யப்படுவார். இம்ரான் கான், அவரின் மனைவி புஷ்ரா பீபி, அவரின் தோழி ஃபரா கோகி ஆகியோர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் அரசின் ஆட்சிக் காலத்தில் பில்லியன்களில் ஊழல் செய்து சம்பாதித்துள்ளனர்" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த மாதம் இம்ரான் கான் நூற்றுக்கணக்கான ஆளும் அரசின் எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டி 'ஆசாதி அணிவகுப்பு' நடத்தினார். நீதிமன்ற உத்தரவை மீறி பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் நகருக்குள் நுழைந்ததால் அவருக்கு எதிரான தேசத்துரோக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாமா என்று பாகிஸ்தான் அரசு ஆலோசித்துவருவது குறிப்பிடத்தக்கது.