உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 9-வது நாளாகப் போர் நீடித்துவருகிறது. இந்த நிலையில் தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரிலுள்ள ஜேபரோஜையா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷ்ய படைகள் நேரடியாக தாக்குதல் நடத்தின. அப்போது ஜேபரோஜையாவிலுள்ள அணுமின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதான் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம். 1986-ல் சோவியத் யூனியனில் இருந்த செர்னோபில் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து உயிரிழப்பிலும், பொருளாதாரத்திலும் வரலாற்றில் இன்றுவரை மிகப்பெரிய பேரழிவாக உள்ளது. இந்த நிலையில் ஜேபரோஜையா அணுமின் நிலையத்தில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்துள்ளது, இது பெரு விபத்தாக மாறினால், செர்னோபில் பேரழிவைவிடவும் 10 மடங்கு ஆபத்தானதாக இருக்கும் என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ட்விட்டரில் எச்சரித்துள்ளார்.

அந்தப் பதிவில், "ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜேபரோஜையா அணுமின் நிலையம் மீது ரஷ்ய ராணுவம் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் துப்பாக்கிச்சூடு நடத்திவருகிறது. ஏற்கெனவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது வெடித்தால், செர்னோபிலைவிட 10 மடங்கு பெரியதாக இருக்கும். உடனடியாக ரஷ்ய தீயணைப்பு வீரர்களை அனுமதித்து தீயை அணைக்க வேண்டும், மேலும் பாதுகாப்பு மண்டலத்தை நிறுவ வேண்டும்" என டிமிட்ரோ குலேபா குறிப்பிட்டுள்ளார்.
அந்த அணு உலை புதுப்பிக்கப்பட்டு இயங்கவில்லையென்றாலும் அதன் உள்ளே அணு எரிபொருள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசியிருக்கிறார்.
