2014-ம் ஆண்டு ரஷ்யா கிரீமியாவை ஆக்கிரமித்தது. இதைக் கண்டித்து ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து மற்ற நாடுகள் ராணுவத் தளவாடங்கள் வாங்குவதைத் தடுக்க சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனாலும், ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை வாங்க துருக்கி ஒப்பந்தம் செய்தது. அதன் பின்னர் துருக்கியைக் கண்டித்து துருக்கி மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து இந்தியாவும் எஸ்-400 ரக ஏவுகணை வாங்க ஒப்பந்தம் செய்தது. அதைத் தொடர்ந்து, இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதிக்குமா எனக் கேள்வியெழுந்த நிலையில் அமெரிக்கா நீண்ட மௌனம் சாதித்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்காவின் நாடாளுமன்ற சபையில், "இந்தியாவுக்கு அண்டை நாடான சீனாவிடமிருந்து அச்சுறுத்தல் இருக்கிறது. அதைச் சமாளிக்க இந்தியாவுக்குப் பல நவீன ஆயுதங்கள் தேவை. எனவே, ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு மட்டும் கட்சா சட்டத்தில் திருத்தம் செய்து அனுமதி அளிக்கப்படுகிறது" என ஜனநாயகக் கட்சி எம்.பி கன்னா தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து அவர், "அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவைத் தொடர உதவும்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து நடந்த குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
