இலங்கையில் நிலவிவரும் அசாதாரண சூழல் காரணமாக, மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதையடுத்து, நேற்றைய தினம் அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றிருக்கிறார். யார் இந்த ரணில் விக்ரமசிங்க, இலங்கை அரசியலில் அவருடைய முக்கியத்துவம் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
1970-களில் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணி மூலமாக அரசியல் பயணத்தைத் தொடங்கிய ரணில் விக்கிரமசிங்க, முதன்முறையாக 1977-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலுள்ள பியகம தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவருக்கு, இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர், 1980-ம் ஆண்டு கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது. கல்வி அமைச்சராக சுமார் 9 ஆண்டுகள் பணியாற்றிய ரணில் விக்கிரமசிங்க, 1993-ம் ஆண்டு முதன்முறையாக இலங்கைப் பிரதமராகப் பதவி ஏற்றார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS1994-ம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் காமினி திசநாயக்கா கொல்லப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 1999-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட ரணில் தோல்வியடைந்தார். அதன் பின்னர், சந்திரிகா தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. ரணில் இரண்டாவது முறையாகப் பிரதமரானார். ஆனால், 2004-ம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடியும் முன்பே, அதிபர் சந்திரிகா மேற்கொண்ட நடவடிக்கையால், ரணில் தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்பட்ட தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க கட்சி தோல்வியைத் தழுவியது.

தொடர்ந்து 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சேவிடம் ரணில் விக்ரமசிங்க தனது வெற்றிவாய்ப்பைப் பறிகொடுத்தார். ஈழ இறுதிப்போர் முடிவுற்ற பின்னர், 2010-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ரணில் தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலிலும் மகிந்த ராஜபக்சேவே மீண்டும் வெற்றிபெற்று அதிபரானார்.

அதற்கடுத்து, 2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட, எதிர்க்கட்சிகளின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணி 106 இடங்களைக் கைப்பற்றியது. இருப்பினும், ஆட்சியமைக்க 113 இடங்களைப் பெற்றால்தான் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்றிருந்த சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றது. அதிபராக மைத்திரிபால சிறிசேனா பதவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர், அதிபரால் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். மேலும், அதே ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அபார வெற்றிபெற்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால், அவரது பிரதமர் பதவி நீண்டகாலம் நீடிக்கவில்லை; 2018-ம் ஆண்டு நிகழ்ந்த அரசியல் குழப்பத்தால், ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். அதேசமயம் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவைப் பிரதமர் பதவியில் அமர்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால், அதிருப்தியடைந்த ரணில் விக்ரமசிங்க, `இந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' எனக் கூறி போர்க்கொடி உயர்த்தினார். இறுதியாக, இந்த வழக்கை விசாரித்த மீயுயர் நீதிமன்றம் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி விலக்கியது அரசியலமைப்புக்குப் புறம்பானது எனக் கூறி அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. மகிந்த ராஜபக்சே பிரதமராகவும், அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே அதிபராகவும் பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் இந்தத் தேர்தலில், தனது சொந்தக் கட்சிக்குள்ளாகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பலை வீசவே, சஜித் பிரேமதாச பிரதமராகப் போட்டியிட்டார்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியைச் சந்திக்கவே, கட்சி இரண்டாக உடைந்தது. சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி எனும் புதிய கட்சியை அறிவித்தார். தனித்துவிடப்பட்ட ரணில் விக்ரமசிங்க, 2020-ல் நடைபெற்ற இலங்கை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஓர் இடத்தைக்கூட கைப்பற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு, படுதோல்வியைச் சந்தித்தார். அதேசமயம், பிரிந்து சென்று தனிக்கட்சி ஆரம்பித்த சஜித் பிரேமதாச 54 இடங்களைக் கைப்பற்றி இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானர். இருப்பினும், 2021-ம் ஆண்டு, கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் மூலமாக, நாடாளுமன்றத்தில் காலடி எடுத்துவைத்தார்.

ரணில் விக்கிரமசிங்க தனது 43 ஆண்டுக்கால அரசியல் வரலாற்றில், ஒரு முறைகூட தனது பிரதமர் பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்திசெய்தது கிடையாது. இந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண அரசியல் சூழ்நிலை காரணமாக, அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அழைப்பின்பேரில் மீண்டும் இலங்கை பிரதமராக பதவியேற்றிருக்கிறார் ரணில் விக்கிரசிங்க!
இனி இலங்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.