உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யப் படைக்கும், உக்ரேனியப் படைக்கும் இடையே தொடங்கிய போர், இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஐ.நா சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், ரஷ்யா - உக்ரைன் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் இதுவரை, போரை நிறுத்துவதற்கான அறிகுறியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சந்தித்தார். அப்போது உக்ரைனில் நிலவும் தற்போதைய நிலை மற்றும் புச்சா நகர் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய புதின், ``புச்சாவில் நடந்த தாக்குதலுக்கும், ரஷ்ய ராணுவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அதை யார் செய்தார்கள், எப்படிச் செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உக்ரைனில் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தாலும், பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடுகளை எட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். பேச்சுவார்த்தையை நாங்கள் நடத்துகிறோம். அதை ஒருபோதும் நாங்கள் நிராகரிக்கவில்லை. மேலும், எங்களின் ராணுவ நடவடிக்கை பற்றிய உங்களின் கவலைகள் குறித்தும் நாங்கள் அறிவோம். அது குறித்து விவாதிக்கவும் நாங்கள் தயார்" என குட்டரெஸிடம் கூறினார்.
