இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால், அத்தியாவசியப் பொருள்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது.
மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருவதால், அரசியல் அழுத்தம் காரணமாக இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருந்தார். அவர் தற்போது இலங்கையில் இல்லை. ராணுவ விமானம் மூலம் தன் மனைவியுடன் கோத்தபய இலங்கையிலிருந்து வெளியேறி மாலத்தீவில் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பதவி விலகல் கடிதத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கையெழுத்திட்டிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், அதை ஏற்க மறுத்த மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போராட்டக்காரர்கள் மீண்டும் இலங்கை பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நிலையில், அவர்கள்மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. மேலும் கோத்தபய ராஜபக்சேவுடன், ரணில் விக்ரமசிங்கவும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிகள் அடங்கிய ஓர் அரசு அமைய வேண்டும் என்றும் மக்கள் கொழும்பில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதனால் தற்போது இலங்கை கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது. இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில், அவசரநிலையைப் பிரகடனப்படுத்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்திருக்கிறது.