உக்ரைனில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய ரஷ்யப் படையினரின் ஆக்கிரமிப்பு போர், இதுவரை நிலையான முடிவுகள் ஏதும் எட்டப்படாமல் நான்கு வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளும் நான்கு முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும், இரு தரப்பிலிருந்து ஆக்கபூர்வ முடிவுகள் எடுக்கப்படவில்லை. மேலும், உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், ரஷ்யா அதைக் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சென்ற வார இறுதியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``புதினுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயார். ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியுற்றால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும்” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை புதிய வீடியோ ஒன்றில் இது தொடர்பாகப் பேசியுள்ளார் ஜெலன்ஸ்கி. அதில், ``மரியுபோல் நகரில் 1,00,000 மக்கள் உணவு, தண்ணீர், மருந்து இல்லாமல் மனிதாபிமானமற்ற நிலையில் வாழ்ந்துவருகின்றனர். போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடனான சமாதானப் பேச்சுக்கள் கடினமானதாகவும், சில சமயங்களில் மோதலாகவும் இருக்கிறது. ஆனாலும் அதற்கான முயற்சியில் படிப்படியாக நாங்கள் முன்னேறிவருகிறோம்" என அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.