1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாக்ஷி மகராஜ் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே குற்றம்சாட்டப்பட்டவர்களில் 17 பேர் உயிரிழந்தனர். மீதமிருந்த 32 பேரும் தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில், லக்னோவிலுள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இன்று காலை பரபரப்பானது. தீர்ப்பு வழங்கப்படுவதை ஒட்டி நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பேரிகார்டு தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி உள்ளிட்டோர் இன்று நேரில் ஆஜராகவில்லை. அவர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்களில் 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு 2,000-த்துக்கும் அதிகமான பக்கங்கள் கொண்டது என்று கூறப்படுகிறது. `பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் அல்ல’ என்று குறிப்பிட்ட நீதிபதி, குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என்று கூறி 32 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.