கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் குருவாயூர் கோயிலில் `கோடத்தி விளக்கு’ (Kodathi Vilakku - Court Lamp) எனப்படும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. குருவாயூர் ஏகாதசியையொட்டி நடத்தப்படும் இந்த விழாவில் பல சடங்குகள், நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதை சாவக்காடு முன்சீப் நீதிமன்ற சங்கத்தின் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று நடத்திவருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நீதிபதி ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியாரின் அறிவுறுத்தலின்பேரில், உயர் நீதிமன்ற நிர்வாகம் ஒரு குறிப்பாணையை வெளியிட்டிருக்கிறது. அதில்,``நீதிமன்றம், அரசியலமைப்பின் கீழ் செயல்படும் மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பு என்பதால், இந்த நிகழ்வில் நீதித்துறை அதிகாரிகள் பங்கேற்பதை ஊக்குவிப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் தனியாகவும் கூட்டாகவும் இது மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், மதத்தைப் போற்றும் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது சரியில்லை.
மேலும், இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டியது கட்டாயம் அல்லது கடமை என்றோ கருத வேண்டாம். இந்த விழாவுக்கு `கோடத்தி விளக்கு' (Court Lamp) என்ற பெயரைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது'' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், ``திருச்சூர் மாவட்ட நீதித்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்பதை திருச்சூர் முதன்மை மாவட்ட நீதிபதி, அனைத்து நீதித்துறை அதிகாரிகளுக்கும் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்" என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.