கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 11-ம் வகுப்புத் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வு எழுத அனுமதி உண்டு. அதே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களைத் துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனக் கூறி மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, ``ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவிக்கு, துணைத் தேர்வு எழுத சென்னை உயர் நீதிமன்றம், 2018-ல் அனுமதி வழங்கியிருக்கிறது” என மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களுக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டுவதாக இது இருப்பதாகவும் வாதிடப்பட்டது.

ஆனால், `உயர் நீதிமன்ற உத்தரவு, குறிப்பிட்ட அந்த மாணவி வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்று பெறுவதற்காகவே, துணைத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டதாகவும், அந்த உத்தரவு இந்த வழக்குக்குப் பொருந்தாது என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு எழுத அனுமதியில்லை என விதிகள் உள்ளதாகவும்’ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நடத்தும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் தரப்பில் வாதாடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ``மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்ல வேண்டும். இது அவர்களின் எதிர்காலம் என்பதால், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11-ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கும் ஒருமுறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும்” என உத்தரவிட்டிருக்கிறார்.