திருமணத்திற்குப் பிறகு பல பெண்கள் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்காக சிலர் கணவருடன் சண்டையிடுகின்றனர். இச்சண்டையால் கணவன், மனைவி இடையே இடைவெளி ஏற்படுகிறது.
இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த சுஷ்மா மண்டல் என்ற பெண், தன் கணவரை அதிகளவில் மனரீதியாகச் சித்ரவதை செய்ததாக அவருக்குக் குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து சுஷ்மா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்மனு நீதிபதிகள் செளமன் சென் மற்றும் உதய் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

பெண்ணின் கணவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், `சம்பந்தப்பட்ட பெண் தன் கணவரை மனரீதியாக கடுமையாக சித்ரவதை செய்து வந்தார். அவரை கோழை என்றும், வேலையில்லாதவன் என்றும் கூறி கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அதோடு கணவரை அவரின் பெற்றோரிடமிருந்து பிரித்து தனிக்குடித்தனம் செல்ல கட்டாயப்படுத்தினார். சிறு சிறு பிரச்னைகளுக்காக கணவரின் பெற்றோருடன் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டே இருந்தார்’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ’இந்தியக் குடும்பத்தில் திருமணத்திற்கு பிறகு மகன்கள் தங்களது பெற்றோருடன் வசிக்க வேண்டும். அப்படி தனியாக பிரிந்து செல்வதாக இருந்தால் அதற்குத் தகுந்த காரணம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னையில் ஈகோ மற்றும் நிதிப்பிரச்னையும் இருக்கிறது. மனைவியின் கட்டாயத்தால் கணவன் தன் பெற்றோரை பிரிந்து தனியாக சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.

இந்திய கலாசாரத்தில் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான உறவு மிகவும் புனிதமானது. எனவே மகன்கள் தான் பெற்றோரை கவனித்துக் கொள்ளவேண்டும். ஆகவே திருமணத்திற்குப் பிறகு கணவனை பெற்றோரிடமிருந்து மனைவி பிரிக்க முயன்றால் மனைவியிடமிருந்து கணவன் விவாகரத்துக் கோரலாம். அதோடு கணவனை மனைவி கோழை என்று கூறினாலோ, வேலையில்லாதவன் என்று கூறினாலோ அதுவும் கணவனை கொடுமைப்படுத்துவதாகவே அர்த்தம்’ என்ற நீதிபதிகள், இந்தக் காரணங்களின் அடிப்படையில் கணவன் மனைவியிடமிருந்து விவாகரத்துக் கோரலாம் என்று தெரிவித்தனர். அதோடு கீழ் கோர்ட் வழங்கிய விவாகரத்தை உறுதி செய்து உத்தரவிட்டனர்.