Published:Updated:

அட்டப்பாடி மது கொலை வழக்கு: `13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல்’ - மது குடும்பத்தினர் அதிருப்தி

கொலைசெய்யப்பட்ட அட்டப்பாடி மது

``மதுவின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்ய விரும்பினால், அரசு அவர்களுக்கு உதவி செய்யும்’’ என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

அட்டப்பாடி மது கொலை வழக்கு: `13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல்’ - மது குடும்பத்தினர் அதிருப்தி

``மதுவின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்ய விரும்பினால், அரசு அவர்களுக்கு உதவி செய்யும்’’ என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

கொலைசெய்யப்பட்ட அட்டப்பாடி மது

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடிப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் மது, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஒரு கும்பல் தாக்கியதில் மரணமடைந்தார். பசிக்கு கடைகளிலிருந்து உணவுப்பொருள்கள் திருடியதாகக் குற்றம் சுமத்தி மதுவை அஜமுடி காட்டிலிருந்து பிடித்துக் கொண்டுவந்த அந்தக் கும்பல், முக்காலிப் பகுதியில் கட்டிவைத்துத் தாக்கியது. அந்தக் கும்பல் தாக்கும் வீடியோக்கள் அந்த சமயத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தின. மது கொலை வழக்கு மண்ணார்க்காடு பட்டியலினத்தவருக்கான தனி கோர்ட்டில் நடைபெற்றது.

14 குற்றவாளிகள்
14 குற்றவாளிகள்

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் 16 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். மது கொலை வழக்கில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், நான்காம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அனீஷ், 11-ம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அப்துல் கரீம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர். முதல் குற்றவாளியான ஹுசைன் உள்ளிட்ட 14 பேரும் குற்றவாளிகள் என கோர்ட் அறிவித்தது. அவர்களுக்கான தண்டனையை நீதிபதி ரதீஷ்குமார் நேற்று அறிவித்தார்.

அந்தத் தீர்ப்பில் 13 குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 16-ம் குற்றவாளியான முனீருக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் ஏற்கெனவே விசாரணை சமயத்தில் சிறையில் இருந்ததால் 500 ரூபாய் அபராதத்தொகை மட்டும் செலுத்தியதையடுத்து விடுவிக்கப்பட்டார். முதல் குற்றவாளியான ஹுசைனுக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற 12 குற்றவாகிகளுக்கும் தலா ஒரு லட்சத்து 18,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அட்டப்பாடி மது தாக்குதல் சம்பவம்
அட்டப்பாடி மது தாக்குதல் சம்பவம்

மொத்தமுள்ள அபராதத் தொகையான 15 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாயில் 75 சதவிகிதம் தொகை மதுவின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும், அதில் 50 சதவிகிதம் தொகை மதுவின் தாய்க்கு வழங்க வேண்டும் எனவும் கோர்ட் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆதாரங்கள் இல்லாமலும், கோர்ட் குற்றவாளி எனக் கூறாத நிலையில் மதுவைத் திருடன் என்று முத்திரைகுத்த முடியாது என கோர்ட் கருத்து தெரிவித்திருந்தது.

மதுவின் தாய் மல்லி
மதுவின் தாய் மல்லி

இந்த நிலையில், மது கொலை வழக்கில் நீதி கிடைக்கவில்லை என மதுவின் தாய் மல்லி தெரிவித்திருக்கிறார். `குற்றம் செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அளித்த தண்டனை போதாது. எனவே, ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்’ என மல்லி தெரிவித்திருக்கிறார். `மதுவின் குடும்பத்தினர் மேல் முறையீடு செய்ய விரும்பினால் அரசு அவர்களுக்கு உதவி செய்யும்’ என அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.