அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கள்ள ஓட்டு போட்டதாக சொல்லப்படும் திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணமாக்கியது, அரசு உத்தரவை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது மற்றும் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது என அடுத்தடுத்து மூன்று வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். இதில், திமுக பிரமுகரைத் தாக்கியது, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற வழக்குகளில் மட்டும் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜெயக்குமார், நில அபகரிப்பு வழக்கிலும் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் வாரம் 3 முறை கையெழுத்திட வேண்டும் என்றும் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தற்போது மூன்று வழக்குகளிலும் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, சிறையிலிருந்து ஜெயக்குமார் விடுவிக்கப்படுவார்.
