சென்னை, நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பட்டாபிராமன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ``சென்னை, நந்தம்பாக்கம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்திவந்த பொதுவான சாலையை, 2009-ம் ஆண்டு முதல் ராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது. தற்போது வரை வருவாய்த்துறை ஆவணங்களில் அந்தச் சாலை `பொதுவான சாலை' என்றே வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்திவந்த அந்தச் சாலையை ராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது. இதனால், அந்தப் பகுதி மக்கள் 5 கிலோமீட்டர் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த நிலம் ராணுவத்துக்கு வழங்கப்படாத நிலையில், ராணுவ மருத்துவமனை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறது. பொதுமக்களின் நலன் கருதி அந்த நிலத்தை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தர வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்குவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசும், ராணுவ அதிகாரிகளும் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.