`காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது!’ - உயர் நீதிமன்றம் கருத்து

`காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது. போக்குவரத்து காவல்துறையினர் இல்லாமல் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாது’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
கரூரைச் சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,``தமிழகக் காவல்துறையில் பணிபுரிபவர்கள் மழை, வெள்ளம், வெயில், போன்ற அனைத்து காலங்களிலும் தொடர்ந்து பணி செய்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை 1,000 பேருக்கு 2 பேர் என்ற விகிதத்தில் மட்டுமே காவல்துறையினர் இருப்பதால், மிகவும் சிரமப்பட்டு பணி செய்கின்றனர். அதுவும் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்துவருகின்றனர். ஆனால், பிற மாநிலங்களில் கூடுதலாக சம்பளம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் போலீஸாருக்கு, வெறும் ரூ.18,000 முதல் 20,000 ரூபாய் வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் போலீஸாக நியமிக்கப்படும் 90 சதவிகிதத்தினர் அவர்களது வீட்டிலிருந்து, சொந்த ஊரிலிருந்து வெகுதொலைவிலேயே பணியில் நியமிக்கப்படுகின்றனர் . அவர்களுக்கு வழங்கப்படும் இந்த மிகக் குறைந்த ஊதியம் அவர்களது வாழ்க்கை நடத்துவதற்குப் போதிய அளவில் இல்லாமல் இருக்கிறது. எனவே, தொடர்ந்து பணியில் ஈடுபடும் தமிழக போலீஸாரின் ஊதியத்தை உயர்த்தித் தர வேண்டும். அதேபோல் போலீஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், `காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது. போக்குவரத்து காவல்துறையினர் இல்லாமல் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாது. சில நிகழ்வுகள் காவல்துறையினருக்கு எதிராக இருந்தாலும், காவல்துறையினர் நமக்குத் தேவை. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் காவல்துறையினர் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள்’ எனக் கருத்து தெரிவித்தனர்.

மேலும், தமிழக காவல்துறையினர் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன... அவர்களுக்கு சரியான நேரங்களில் பதவி உயர்வு வழங்கப்படுகிறதா... காவல்துறையில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன... அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் ஊதியம் குறித்த தகவல்... அவர்களுக்கென சிறப்பு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறதா... எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதேபோல், 2013-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினருக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறதா... அமைக்கப்படவில்லையென்றால் எப்போது அமைக்கப்படும்... தமிழ்நாட்டில் எத்தனை காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும்17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.