பேருந்துகளில் பயணிக்கும்போது சில நேரங்களில் டிக்கெட் கட்டணம் போக மீதி சில்லறையை நடத்துநர்கள் தரத் தவறுவதுண்டு. அப்படி தனக்கு ஒரு ரூபாய் சில்லறையைத் தராமல் விட்டதற்கு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஒருவர் இழப்பீடு பெற்றுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டில் ரமேஷ் நாயக் என்பவர், பெங்களூரு சாந்திநகரில் இருந்து மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திற்கு, பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் பயணம் செய்துள்ளார். நடத்துநர் 29 ரூபாய்க்கான டிக்கெட்டை வழங்க, இவர் 30 ரூபாய் கொடுத்துள்ளார். மீதம் ஒரு ரூபாய் சில்லறையை நடத்துநர் திரும்ப கொடுக்கவில்லை.
உயர் அதிகாரிகளிடம் விஷயத்தைக் கொண்டு சென்றபோதும், சில்லறை வழங்கப்படவில்லை. சில்லறையைக் கேட்டதற்கு, திட்டும் வாங்கியிருக்கிறார். இதனால் மனமுடைந்தவர், நுகர்வோர் நீதிமன்றத்தில் 15,000 ரூபாய் இழப்பீடு கேட்டு மனுதாக்கல் செய்தார். பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தில், இது அற்பமான ஒரு பிரச்னை எனக்கூறி, புகாரைத் தள்ளுபடி செய்யக் கோரியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `கமிஷனுக்கு இந்தச் சர்ச்சை அற்பமானதாகத் தோன்றலாம். புகார்தாரர் பிரச்னையை உரிமையாக எடுத்துக் கொண்டதால், நுகர்வோரின் உரிமை பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில், புகார்தாரர் நிவாரணத் தொகையை திரும்பப் பெற உரிமை உண்டு.
அந்த நபருக்கு 2,000 ரூபாய் பணத்தை இழப்பீடாகவும், புகார் தாரரின் சட்ட கட்டணமாக 1,000 ரூபாயும் பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 45 நாள்களுக்குள் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தத் தவறும் பட்சத்தில், ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை வட்டி செலுத்த நேரிடும்’ என பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.