நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர், கடந்த 2018-ம் ஆண்டு, பிப்ரவரி, 3 -ம் தேதி, அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டப் பேருந்தில் திருச்செங்கோட்டிலிருந்து ஈரோட்டுக்குச் சென்றார். அப்போது, அந்தப் பேருந்து நடத்துனர் பேருந்துக் கட்டணமான ரூ.7-க்கு பதிலாக, ரூ.8 வசூல் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த நடத்துனரிடம் பாலசுப்ரமணியம் காரணம் கேட்டும், முறையான பதில் சொல்லவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர், அதிகாரிகளிடம் இது குறித்துப் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நாமக்கல் பயனீட்டாளர் சங்கத்தின் மூலம், நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது தொடர்பாக, விசாரணை நடத்திய நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அதில், `தமிழக அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளரும், நடத்துனரும் சேர்ந்து, திருச்செங்கோடு - ஈரோடு இடையே சரியான தூரத்தை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில், கட்டணம் நிர்ணயம் செய்து வசூல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை, இரண்டு மாதங்களுக்குள் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் நிலையில் இருவரும் ரூ.10 லட்சம் அபராதத்தை தமிழ்நாடு நுகர்வோர் நல நிதிக்குச் செலுத்த வேண்டும். அதோடு, நடத்துனர், துணை மேலாளர் வட்டாரப் போக்குவரத்து கழகம் (சேலம் மேற்கு), திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோர் இணைந்து, ரூ.30,000 அபராதமும், முறையீட்டாளரிடம் கூடுதலாக வசூலித்த ரூ.1-ஐயும் திரும்பச் செலுத்த வேண்டும். நேர்மையற்ற வணிகமுறையைக் கடைபிடித்ததற்கும், சேவைக் குறைபாடு மற்றும் மனஉளைச்சலுக்கும் இழப்பீடாக முறையீட்டாளருக்கு ரூ.25,000, வழக்கு செலவாக ரூ.5,000 என ரூ.30,000 அபராதத்தையும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும்' என உத்தரவிடப்பட்டிருக்கிறது.