யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் உத்தரப்பிரதேசத்தில், உமேஷ் பால் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த ஆதிக் அகமது, ஏப்ரல் 15-அன்று மருத்துவப் பரிசோதனைக்காக போலீஸாரால் வெளியில் கொண்டுவரப்பட்டபோது, செய்தியாளர்கள் சந்திப்பின்போது திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஆதிக் அகமதுவின் சகோதரரும் உயிரிழந்தார்.

அதே சமயம் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை உடனடியாக அங்கிருந்த போலீஸார் பிடித்துவிட்டனர். இவர்கள் கொல்லப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் ஆதிக் அகமதுவின் மகன் உட்பட இரண்டு பேர், உமேஷ் பால் கொலை வழக்கில் சிறப்பு போலீஸ் படையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆதிக் அகமதுவின் கொலையைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும், யோகி ஆதித்யநாத் அரசு குறிவைத்து என்கவுன்ட்டர் நடத்திவருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கில் உத்தரப்பிரதேச அரசிடம் உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வியெழுப்பியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், உத்தரப்பிரதேச அரசு தரப்பில், ``நீதிமன்ற உத்தரவுப்படி, இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். பத்திரிகைகளுக்கும் இது தெரியும். தற்போது இந்த விஷயத்தை விசாரிக்க நாங்கள் கமிஷனை அமைத்திருக்கிறோம்" என்று கூறப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து நீதிபதி, ``நாங்கள் அந்தச் சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்தோம். ஆதிக் அகமது, அவருடைய சகோதரரை ஏன் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை?... எதற்காக அவர்களை நடக்கவைத்து அழைத்துச் சென்றீர்கள்?" என்று அடுக்கடுக்காக கேள்வியெழுப்பினார். மேலும், ஆதிக் அகமது கொலை, அவரின் மகன் என்கவுன்ட்டர் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.