அண்மையில் யூடியூபர் சாட்டை துரைமுருகன், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குறித்துக் கடுமையாக விமர்சனம் செய்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதற்காக காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் சாட்டை துரைமுருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ஆனால், நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்துகொள்ளாமல் தொடர்ந்து அவர் அவதூறு கருத்துகளைப் பேசி யூடியூபில் வீடியோக்களைப் பதிவிட்டுவருவதால், சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி ``யூடியூபை பார்த்துத்தான், துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்ச கற்றுக்கொண்டோம் எனக் குற்றவாளிகள் பலரும் வாக்குமூலம் தருகின்றனர். எனவே, அறிவியல் வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், வெளிமாநிலங்களிலிருந்து தேவையற்ற வீடியோக்கள் பதிவு செய்யப்படுகிறது என்றால் அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா என்ற கேள்வி எழுகிறது. யூடியூபுக்கு ஏன் மொத்தமாகத் தடை விதிக்கக் கூடாது... அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா?" எனத் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், ``யூடியூபில் தவறான வீடியோக்களைப் பதிவேற்றம் செய்வதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இது தொடர்பாக சைபர் க்ரைம் டி.ஜி.பி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என்றும் உத்தரவு பிறப்பித்தார்.