விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (32). இவருடைய மனைவி முத்துகனி (32). இந்தத் தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் முத்துகனி இரண்டாவதாக கருவுற்றிருந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவத்துக்காக தாயில்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உள்நோயாளியாக சேர்ந்திருக்கிறார்.

இதனையடுத்து 8-ம் தேதி (சனிக்கிழமை) முத்துக்கனிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது. தாய்-சேய் இருவரும் நலமுடன் இருந்துவந்த நிலையில் குழந்தை இன்று காலை திடீரென இறந்ததாகத் தெரிகிறது. பிறந்து மூன்று நாள்களே ஆன நிலையில் திடீரென குழந்தை இறந்ததால் செய்வதறியாது பெற்றோர்கள் அழுது புலம்பினர்.

தொடர்ந்து, தாயில்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரிவர பணியில் ஈடுபடாமல் ஊழியர்கள் மட்டுமே தொடர்ச்சியாக பணியிலிருந்து வந்ததாகக் குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். குழந்தை இறந்த தகவலறிந்து பாஸ்கரன்-முத்துகனி தம்பதியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தாயில்பட்டி ஆரம்பச் சுகாதார நிலையத்தை திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த வெம்பக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், குழந்தை இறந்தது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, ஆரம்பச் சுகாதார நிலையத்திலுள்ள குறைபாடுகள் குறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து அதை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததன்பேரில், அவர்கள் சமாதானமடைந்தனர். இதையடுத்து உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பச்சிளம் குழந்தை திடீரென இறந்த தகவலறிந்து அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தையின் திடீர் இறப்புக்கான காரணம் குறித்து சிவகாசி மண்டல சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கழுசுவலிங்கத்திடம் பேசினோம். ``தாயில்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருந்து வருகின்றனர். மற்ற மருத்துவமனைகள் போல் அல்லாமல் பிரசவ மருத்துவமனையாக செயல்படுவதால், குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டுவது போல மருத்துவர் அல்லாத பணியை அங்கு மேற்கொள்ள முடியாது. ஏனெனில் குழந்தை பிறப்பதற்கு முன்பும், குழந்தை பிறந்த பின்னும் மருத்துவரின் கண்காணிப்பு அவசியம் என்பதால், அந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையாக ஏற்கெனவே எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், குழந்தை திடீரென உயிரிழந்திருப்பது துரதிஷ்டவசமானது. எனவே, குழந்தை இறப்புக்கு உண்மையான காரணம் தெரியவே உடற்கூறாய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வறிக்கையில் குழந்தை இறப்புக்கான காரணங்கள் தெரியவரும்" என்றார்.