கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா என்ற சபரி. 28 வயதாகும் இவர், அமைச்சர் ஒருவரின் பெயரைச் சொல்லி பலரிடம் பணமோசடி செய்து வந்திருக்கிறார். கரூர் மட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தையும் சேர்ந்த பத்துக்கும் அதிகமானவர்களிடம், ``அமைச்சர் எனக்கு உறவினர். நான் சொன்னா, அடுத்த நிமிஷமே உங்களுக்கு வேலை போட்டுக் கொடுப்பார்" என்று கூறி அவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கறந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அவரிடம் பணத்தைக் கொடுத்தவர்களுக்கு சௌமியா சொன்னபடி வேலை வாங்கிதரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், சௌமியாவிடம் பணத்தை திரும்பக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், பணத்தை தராமல் அவர் இழுத்தடிக்க, அவர்மீது புகார் கொடுக்க நினைத்திருக்கிறார்கள்.

அதற்குள் அவர் தலைமறைவாகிவிட, கரூர் காந்திகிராமம் பகுதியில் அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள், அங்குபோய் அவரை கையும் களவுமாக பிடித்து, பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், சௌமியா இப்படி அமைச்சர் பெயரைச் சொல்லிக்கொண்டு பலரிடம் பணம் மோசடி செய்தது ஒருபக்கம் என்றால், இன்னொருபக்கம் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும் தெரிகிறது.

அதுசம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், கரூர் குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் சுகுமார், கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், ஆய்வாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் அந்தப் பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.