கேரள மாநில உயர் நீதிமன்றம் கொச்சியில் செயல்பட்டுவருகிறது. இங்குள்ள நீதிபதிகளான குஞ்ஞிகிருஷ்ணன், முகமது முஸ்தாக், சியாத் ரஹ்மான் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சைபி ஜோஸ் கிடங்கூர் என்பவர் பலரிடம் பணம் வசூலித்திருப்பதாக உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் டீம் கண்டுபிடித்திருக்கிறது. வழக்குகளிலிருந்து விடுவிப்பதற்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என வக்கீல் சைபி ஜோஸ் கிடங்கூர் 72,00,000 ரூபாய்வரை லஞ்சமாகப் பெற்றதாக உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இது குறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். அந்த அறிக்கையில் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எர்ணாகுளம் சவுத் போலீஸ் ஸ்டேஷனில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் மீது பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அந்த வழக்கில் தயாரிப்பாளர் தரப்பில் வழக்கறிஞர் சைபி ஜோஸ் கிடங்கூர் சினிமா தயாரிப்பாளரிடம் அறிமுகமாகியிருக்கிறார். சைபி ஜோஸ் தயாரிப்பாளரிடமிருந்து 15,00,000 ரூபாய் வாங்கியிருக்கிறார். அதில் ஐந்து லட்சம் ரூபாய் குறைக்க முடியுமா எனத் தயாரிப்பாளர் கேட்டிருக்கிறார். அதற்கு நீதிபதி கூடுதல் பணம் எதிர்பார்க்கிறார் என சைபி ஜோஸ் கூறியிருக்கிறார். இது போன்று பலரிடம் பணம் வசூலித்திருக்கிறார் சைபி ஜோஸ்.
ஒரு நீதிபதியின் பெயரைக்கூறி அவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என 50,00,000 ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும், இதுவரை நீதிபதிகளின் பெயரைச் சொல்லி 72,00,000 ரூபாய் அவர் வாங்கியிருப்பதாகவும் உயர் நீதிமன்ற விஜிலென்ஸின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சைபி ஜோஸ் மூன்று ஆடம்பர கார்கள் சொந்தமாக வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவருவதும் தெரியவந்திருக்கிறது. சினிமா பிரபலங்கள் பலரின் வழக்குகளை சைபி ஜோஸ் கவனித்துவருவதாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சைபி ஜோஸுக்கு எதிராக நான்கு வக்கீல்கள் உயர் நீதிமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். சைபி ஜோஸ் கிடங்கூர் மீது வழக்கறிஞர் சட்டப் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜிலென்ஸ் பரிந்துரைத்திருக்கிறது.