
ஜெ.ஜெயஸ்ரீ
`நம்ம கிருஷ்ணகிரியை நல்லா தெரிஞ்சுப்போம் 200’ பரிசளிப்பு விழா, ஆகஸ்ட் 17ஆம் தேதி, கிருஷ்ணகிரி பாரத் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.
ஒவ்வொரு மாவட்டம் பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், சுட்டி விகடனுடன் இணைப்பாக அளித்து, பள்ளிகளில் தேர்வாகவும் நடத்திவருகிறோம். அந்த வரிசையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். அவர்களில் தேர்வானவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்விக் குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், கிருஷ்ணகிரி துணை கண்காணிப்பாளர் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, இந்தியன் ஆயில் சேல்ஸ் மேனேஜர் சிவக்குமார் மற்றும் பாரத் கல்வி நிறுவனங்களின் தலைவர் மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பிரபாகர், ‘‘உனக்குத் தலைநகரம் நீ பிறந்த மண், அதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். சுட்டி விகடன் மாணவர்களின் திறனை வளர்க்க அருமையான பணியைச் செய்துள்ளது. மாவட்டம் தொடர்பான 200 முக்கிய தகவல்களைத் திரட்டி அளித்ததுடன், அவர்களைத் தேர்வு எழுதச்செய்து பரிசு வழங்குவது அற்புதமான பணி. புத்தகத்தை நானும் படித்தேன். மாவட்டத்தின் பல முக்கிய தகவல்கள் புதுமையாக இருந்தன.
புத்தகத்தை வாசித்தால் மட்டுமே சிறந்த மாணவர்களாக உருவாக முடியும். அந்தப் பணியைச் சுட்டி விகடன் தொடங்கி வைத்துள்ளது. உங்களுக்கு நம் மாவட்டம் பற்றி இங்கே ஒரு விஷயம் சொல்கிறேன். நீரின்றி அமையாது உலகு. நம் மாவட்டத்தில் 1300-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. இவற்றைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ‘‘ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால், அந்தச் சமுதாயத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி தரமானதாக இருக்க வேண்டும். அந்தக் கல்வி புத்தகம் சார்ந்த கல்வியாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. நம்ம சமுதாயத்தைப் பற்றிய எல்லாத் துறைகள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கல்வியாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒழுக்கமான சமுதாயம் உருவாகும். அந்த மகத்தான பணியைச் சுட்டி விகடன் செய்கிறது’’ என்று வாழ்த்து தெரிவித்தார்.

ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சந்திரசேகரன், ‘‘பொதுவாக, தேர்வு என்றாலே குழந்தைகள் விரும்புவதில்லை. அதைச் சுவாரஸ்யமாக்க, இப்படி நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை கொடுத்து, OMR முறையில் தேர்வை நடத்துவது மாணவர்களுக்குப் புதிய அனுபவத்தை அளிக்கும். இந்தத் தேர்வில் 60 விழுக்காடுக்கும் மேலாகப் பெண் குழந்தைகள் கலந்துகொண்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி’’ என்றார்.

கிருஷ்ணகிரி துணை கண்காணிப்பாளர் குமார், ‘‘நான் நிறைய போட்டித் தேர்வுகள் எழுதி இருக்கிறேன். TNPSC, UPSC போட்டித் தேர்வுகளில்கூட OMR முறையே பின்பற்றப்படுகிறது. பெரும் நகரத்திலிருந்து வரும் மாணவர்கள் இதை எளிதில் எழுதிவிடுவார்கள். ஆனால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்குப் புதிய அனுபவமாக இருப்பதால் அவதிப்படுவார்கள். இப்படிச் சிறுவயதிலேயே OMR தேர்வை தெரிந்துகொள்வது சிறந்த வழிகாட்டியாக இருக்கும்’’ என்றார்.

கிருஷ்ணகிரி ரோட்டரி கிளப் தலைவர் வெங்கட்ராமன், ‘‘இந்த இன்ஃபோ புக்கில் இருக்கும் தகவல்களைப் படித்தபோது கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட செய்திகள் புதிதாகவே இருந்தது. கல்வி என்பது பொக்கிஷம். அதைக் கற்றுக்கொள்ள நம் பார்வையை விரிவுப்படுத்த வேண்டும். புதுமையைப் புகுத்த வேண்டும். பாடப்புத்தகங்களைக் கடந்து வாசிக்கப் பழக வேண்டும். வாழ்க்கையில் மிக முக்கியமானவை சுயமதிப்பீடும் நேரமேலாண்மையும். நேரமில்லை என்று சொல்வதை ஏற்க முடியாது. தேடித் தேடிப் புத்தகங்களை வாசியுங்கள்’’ என்றார்.

கிருஷ்ணகிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களான சூர்யா, ஹரிஷ், மோகன்ராஜ், லோகேஷ் ஆகியோர் மிகவும் உற்சாகமா இருந்தனர். ‘‘இந்தத் தேர்வு மிகவும் சுவாரசியமாக இருந்தது. எங்கள் ஊரைப் பற்றிப் படித்ததினால் எளிமையாக இருந்தது’’ என்றார்கள்.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளான வாசுகி, தேன்மொழி, காவியா, தமிழரசி ஆகியோர், ‘‘200 தகவல்களாக இருந்தாலும், படிக்கும்போது கதை மாதிரிதான் ஆர்வமாக இருந்துச்சு. கொடுத்த நேரத்தைவிட சீக்கிரமே தேர்வை முடிச்சுட்டோம். இங்கே வந்தது திருவிழாவுக்கு வந்த மாதிரி இருக்கு’’ என்றார்கள்.

விஜய் வித்யாலயா பள்ளி மாணவர்கள், இந்தத் தேர்வு எழுதியதன் மூலம் போட்டி தேர்வில் கலந்துகொண்டதுபோல ஒரு அனுபவம் ஏற்பட்டது என்றும், இந்தத் தேர்வில் வெற்றிபெற்று பரிசு வாங்கியது பெருமை என்றும் தெரிவித்தனர்.
அண்ணா அறிவகம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் சத்யபாமா மற்றும் குமரவேல் ‘‘சுட்டி விகடன் நடத்திய ‘இன்ஃபோ 200’, மாணவர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் தெரிந்துகொள்ள பல முக்கியமான தகவல்களைக் கொண்டிருந்தது. இதற்காக, எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமான வகுப்பை ஒதுக்கிப் படிக்கவைத்தோம். எங்கள் பள்ளியில் 8 வயதே உள்ள குழந்தைகள் 8 பேர் பரிசுக்குத் தேர்வானார்கள்’’ என்று பெருமையுடன் தெரிவித்தார்கள்.

கல்குட்டப்பட்டி என்ற கிராமத்தில் இயங்கிவரும் ஸ்ரீவிநாயகா வித்யாலயா பள்ளி ஆசியர்கள், ‘‘எங்கள் பள்ளியில் இரண்டு பேர் முதல் பரிசு வாங்கியிருப்பது ரொம்ப பெருமையாக இருக்கு. இதுபோன்ற ஆக்கபூர்வமான பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள்’’ என்றார்கள்.